பீர் தொழிற்சாலை அமைக்க ஆயிரம் மரங்களை வெட்டிய ஒடிசா அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்


பீர் தொழிற்சாலை அமைக்க ஆயிரம் மரங்களை வெட்டிய ஒடிசா அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
x
தினத்தந்தி 24 Nov 2018 2:15 PM GMT (Updated: 24 Nov 2018 1:40 PM GMT)

ஒடிசாவில் பீர் தொழிற்சாலை அமைக்க ஆயிரம் மரங்களை வெட்டியதற்கு அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

புவனேஸ்வர்,

ஒடிசாவில் தென்கானல் மாவட்டத்தில் உள்ள பலராம்பூர் கிராமத்தில் 12.05 ஏக்கர் நில பரப்பில் பீர் தொழிற்சாலை ஒன்று அமைய உள்ளது.  இந்த தொழிற்சாலை அமைக்கும் பணியை தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொள்கிறது.  இதற்காக அந்த கிராமத்தில் இருந்த சால், பியா சால் மற்றும் மகுவா போன்ற விலை மதிப்புமிக்க 956 மரங்கள் வெட்டப்பட்டன.

கடந்த நவம்பர் 3ந்தேதி, முதல் மந்திரி நவீன் பட்நாயக் வீடியோ கான்பெரன்சிங் வழியே இதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

இந்த நிலையில், ஒடிசா சட்டமன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த அனுமதி வழங்கிய நிலையில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பீர் தொழிற்சாலைக்காக பெரிய வகை மரங்களை வெட்டியதற்கு அரசை கடுமையாக சாடினர்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் வேண்டுகோள் விடுத்தனர்.  இதுபற்றி பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் இன்று வலியுறுத்தி உள்ளனர்.

Next Story