நாடாளுமன்ற தேர்தல் 2-ம் சுதந்திர போராட்டம்: பா.ஜனதாவை வீழ்த்த அனைத்து மாநில கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் - கொல்கத்தாவில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு


நாடாளுமன்ற தேர்தல் 2-ம் சுதந்திர போராட்டம்: பா.ஜனதாவை வீழ்த்த அனைத்து மாநில கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் - கொல்கத்தாவில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 19 Jan 2019 11:30 PM GMT (Updated: 19 Jan 2019 9:02 PM GMT)

பா.ஜ.க.வை தனியாக இருந்து வீழ்த்த முடியாது என்றும், பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளும், எதிர்க்கட்சியினரும் ஒன்று சேர வேண்டும் என்று கொல்கத்தாவில் நடந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கொல்கத்தா,

கொல்கத்தாவில், பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, பேரணி மற்றும் மாநாடு நடத்தியது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தார். பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி உள்பட பலர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மாநாட்டில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழுக்கு மிக நெருக்கமான ஒரு மொழி உண்டென்றால் அது வங்கமொழி தான். தமிழில் அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட அயல் மொழிகளில் முக்கியமானது வங்கமொழி. வங்கத்து விவேகானந்தருக்கு எங்கள் குமரியில் நினைவகம் அமைத்துள்ளோம். மகாகவி ரவீந்திரநாத் தாகூர் தனது சாந்தி நிகேதன் கல்வி நிறுவனத்தை அமைக்க நிதி திரட்ட தமிழகம் தான் வந்திருந்தார். எங்கள் தமிழ்க்கவி பாரதியார் தனது குருவாக ஏற்றுக்கொண்டது வங்கத்தில் வாழ்ந்து வந்த ஐரிஷ் பெண்மணியான நிவேதிதாவைப் பார்த்துத் தான். வங்கத்து நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறக்க வேண்டும் என்றார். இப்படி அரசியல், இலக்கியம், ஆன்மிகம் அனைத்திலும் தமிழர்களும் வங்காளிகளும் சகோதர, சகோதரிகள் தான்.

இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் தான் மே மாதம் நடக்க இருக்கும் ஜனநாயகப் போர்க்களம். இந்தியாவின் ஒற்றுமையைக் குலைத்து, மக்களிடம் மோதல் போக்கை உருவாக்கி, மதவாத இந்தியாவை உருவாக்க நினைக்கும் நச்சு சக்திகளான பாரதீய ஜனதா கட்சியிடம் இருந்து நாட்டை மீட்பதை தான் சுதந்திரப் போராட்டம் என்று சொல்கிறேன். இந்த மேடையில் நான் இந்தியாவைப் பார்க்கிறேன். வேறு வேறு மொழியைச் சேர்ந்தவர்கள் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். வேறு வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். வேறு வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இங்கு இருக்கிறார்கள். ஆனாலும் நம்முடைய சிந்தனை ஒன்று தான் பாரதீய ஜனதா கட்சியை வீழ்த்த வேண்டும். நரேந்திரமோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதைத்தான் நமது முன்னோர்கள் இந்தியாவின் தாரக மந்திரமாகச் சொன்னார்கள். ஆமாம் நாம் வேறு வேறாக இருந்தாலும் நம்முடைய லட்சியம் ஒன்றுதான். இந்த ஒற்றுமை மட்டும் நம்மிடம் இருக்குமானால் வெற்றி நமக்குத்தான். தோல்வி நரேந்திர மோடிக்குத்தான்.

சில மாதங்களுக்கு முன்பு வரையிலும் நரேந்திரமோடி தனக்கு எதிரியே இல்லை என்று சொல்லி வந்தார். எதிரிகளே இல்லாத இந்தியா என்று சொல்லி வந்தார். எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியா என்று சொல்லி வந்தார். ஆனால் சில வாரங்களாக அவர் எதிர்க்கட்சிகளைத்தான் விமர்சனம் செய்து வருகிறார். எந்தக்கூட்டமாக இருந்தாலும் மைக் பிடித்ததும் எதிர்க்கட்சிகளைத்தான் திட்டுகிறார். நாம் ஒன்று சேர்ந்தது அவருக்கு பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை என்பதை விட அவருக்கு பயமாக இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் நாம் வீழ்ந்து போவோம் என்பது நரேந்திரமோடிக்கு தெரிந்துள்ளது. அதனால் தான் தினமும் கோபத்தால் நம்மை திட்டுகிறார். பயத்தால் புலம்புகிறார். இந்த மேடையில் இருக்கும் தலைவர்களுக்கும் இங்கு வர முடியாத தலைவர்களுக்கும் இந்த கூட்டணிக்குள் வர தயங்கிக்கொண்டு இருக்கும் தலைவர்களுக்கும் நான் சொல்வது இதுதான், நம்முடைய ஒற்றுமை நரேந்திரமோடியை பயம் கொள்ள வைத்துள்ளது. ஒற்றுமையைக் காப்போம். அதன் மூலம் இந்தியாவைக் காப்போம் என்பது தான்.

என்னிடமே சிலர் கேட்கிறார்கள், நரேந்திரமோடியை நீங்கள் ஏன் கடுமையாக விமர்சிக்கிறீர்கள் என்று, அவர் உங்களுக்கு என்ன இடைஞ்சல் கொடுத்தார் என்று கேட்கிறார்கள். எனக்கு ஒருவர் உதவி செய்கிறாரா, இடைஞ்சல் செய்கிறாரா என்பது முக்கியமல்ல. நாட்டு மக்களுக்கு ஒருவர் உதவி செய்கிறாரா இடைஞ்சல் செய்கிறாரா என்பதுதான் முக்கியம். நான் ஆட்சிக்கு வந்தால் தேனாறும், பாலாறும் ஓடும் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் நரேந்திர மோடி. 100 கூட்டம் பேசினார். 1,000 பொய்களைச் சொல்லி இருப்பார்.

இது யாருக்கான ஆட்சி? கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி. பெரும் நிறுவனங்களுக்கான ஆட்சி. பெரு முதலாளிகளுக்கான ஆட்சி. மக்களுக்கான ஆட்சி அல்ல. இன்னும் சொன்னால், இந்திய அரசாங்கத்தை ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக நரேந்திர மோடி ஆக்கிவிட்டார். கார்ப்பரேட்டுகளுக்காக கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும் கார்ப்பரேட் ஆட்சி இது. இதற்கு எதற்கு நாம் வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.

நரேந்திரமோடியின் ஆட்சியில் அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டதைப் போல, ஊழலும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளது. அதிகாரம் ஊழலுக்கு வழி வகுக்கும், அதிக அதிகாரம் அதிக ஊழலுக்கு வழி வகுக்கும் என்பார்கள். அதுதான் நரேந்திரமோடி ஆட்சியில் நடக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா 50 ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விடும். அதனை நீங்கள் உணர்ந்து இங்கு கூடி இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட உணர்ச்சிமயமான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த மேற்கு வங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு நன்றி.

நரேந்திரமோடி ஒரு சிலரைப் பார்த்தால் பயப்படுவார். அப்படி நரேந்திரமோடி பார்த்து பயப்படும் தலைவர்களில் ஒருவர் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்துக்குள் வருவதற்கு மோடியும், அமித்ஷாவுமே பயப்படுவார்கள். அந்தளவுக்கு இரும்புப் பெண்மணியாக இருக்கக் கூடியவர் மம்தா பானர்ஜி. இன்னும் ஐந்து மாத காலத்துக்கு நாம் அனைவரும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு ஒன்றாகச் சென்று மத்திய அரசுக்கு எதிரான மக்களை அணி திரட்ட வேண்டும்.

பா.ஜ.க.வை தனிமைப்படுத்த வேண்டும். பா.ஜ.க.வை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். தனியாக இருந்து அவர்களை வீழ்த்த முடியாது. அது அவர்களுக்கு சாதகமாக ஆகிவிடும். இதனை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும். நமது ஒற்றுமை, மோடியை வீழ்த்தும், நமது ஒற்றுமை, நம்மை வெற்றி பெற வைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story