நிதி மோசடி வழக்கு: ராபர்ட் வதேராவின் ரூ.4.62 கோடி சொத்துக்கள் முடக்கம்


நிதி மோசடி வழக்கு: ராபர்ட் வதேராவின் ரூ.4.62 கோடி சொத்துக்கள் முடக்கம்
x
தினத்தந்தி 15 Feb 2019 6:24 PM GMT (Updated: 15 Feb 2019 6:24 PM GMT)

நிதி மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவின் ரூ.4.62 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம் செய்தது.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், சோனியா காந்தியின் மருமகனுமான ராபர்ட் வதேரா, ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் ராஜஸ்தானில் நில மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். லண்டனில் சொத்து வாங்கிய விவகாரத்தில் நிதி மோசடி தொடர்பாக அமலாக்கப்பிரிவு டெல்லியில் அவரிடம் தொடர்ந்து மூன்று நாட்கள் விசாரணை நடத்தியது. இதற்கிடையே ராஜஸ்தான் நிலமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ராபர்ட் வதேரா முன்ஜாமீன் பெற்றார்.

இவ்வழக்கு விசாரணையில் வதேரா மட்டுமின்றி அவரது தாயார் மவுரினிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் நில விவகாரம் தொடர்பான விசாரணைக்காக ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வதேராவும், மவுரினும் ஆஜரானார்கள்.  

இந்நிலையில் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ரூ.4.62 கோடி மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

Next Story