ஒப்புகை சீட்டு வழக்கு: மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - விசாரணை 8-ந் தேதிக்கு ஒத்திவைப்பு


ஒப்புகை சீட்டு வழக்கு: மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - விசாரணை 8-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 2 April 2019 3:15 AM IST (Updated: 2 April 2019 2:47 AM IST)
t-max-icont-min-icon

ஒப்புகை சீட்டு வழக்கில் மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதுடன், விசாரணையை 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

புதுடெல்லி,

காங்கிரஸ், தி.மு.க., தெலுங்கு தேசம் உள்ளிட்ட 21 கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 50 சதவீத வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் கடந்த வாரம் தேர்தல் கமிஷன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் இதுபோன்று மாற்றங்களை கோரும் மனுக்கள் ஏற்கத்தக்கது அல்ல என்றும், எனவே மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கும், இதே கோரிக்கையுடன் ஏற்கனவே ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவும் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், தேர்தல் கமிஷன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தின் மீது மனுதாரர்கள் அனைவரும் ஒரு வாரத்தில் எதிர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story