சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் 3 நாட்கள் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை


சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் 3 நாட்கள் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
x
தினத்தந்தி 15 April 2019 4:21 PM GMT (Updated: 15 April 2019 4:21 PM GMT)

சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் 3 நாட்கள் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

லக்னோ, 

உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவை தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பா.ஜ.க. சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா, காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரதா பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய ஆசம் கான், “இங்கு 10 வருடங்களாக ஒருவர் மக்கள் பிரதிநிதியாக உள்ளார். ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன்” என்றார்.

அவருக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.  ஆசம்கானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  தனக்கு எதிராக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் போட்டியில் இருந்து விலக தயார் எனவும் யாரையும் பெயர் குறிப்பிட்டு தான் பேசவில்லை எனவும் ஆசம்கான் தெரிவித்தார்.

இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் என கூறி அவர் 72 மணிநேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.  இதன்படி அவர் நாளை காலை 10 மணி முதல் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

Next Story