நரேந்திர மோடி 2-வது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார்


நரேந்திர மோடி 2-வது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார்
x
தினத்தந்தி 30 May 2019 1:38 PM GMT (Updated: 30 May 2019 1:38 PM GMT)

ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் நரேந்திர மோடி 2-வது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.

17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. பாரதீய ஜனதா மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது. என்றாலும் கடந்த 2014-ம் ஆண்டு தனித்து ஆட்சியை பிடித்த போது கூட்டணி கட்சிகளையும் மந்திரிசபையில் சேர்த்துக் கொண்டதை போல், இந்த முறையும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு அமைக்கிறது.

நாடாளுமன்ற பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக (பிரதமர்) தேர்ந்து எடுக்கப்பட்ட மோடிக்கு, புதிய பிரதமராக பதவி ஏற்குமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார். அதை பிரதமர் மோடி ஏற்றார். பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் உள்ள முற்றத்தில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  ‘பிம்ஸ்டெக்’ அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளுக்கு பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.  

வழக்கமாக புதிய அரசு பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெறும். ஆனால் அந்த மண்டபத்தில் சுமார் 500 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் இந்த முறை மோடி அரசு பதவி ஏற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் உள்பட சுமார் 8,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.  இதனால் இடவசதியை கருத்தில் கொண்டு ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.  இந்திய வரலாற்றில் பிரதமர் பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடைபெறுவது இது 6-வது முறை ஆகும்.

ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். விழாவில் மோடிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன்மூலம் அவர் தொடர்ந்து 2-வது முறையாக பிரதமர் ஆனார். அவரை தொடர்ந்து பிற அமைச்சர்கள் பதவியேற்று வருகிறார்கள். பாரதீய ஜனதாவைச் சேர்ந்தவர்களுடன் சிவசேனா, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மந்திரிகளாக பதவி ஏற்கிறார்கள். 

பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்ககள் கலந்துக்கொண்டுள்ளன் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அழைப்பை ஏற்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர். 

மோடியின் அழைப்பை ஏற்று ‘பிம்ஸ்டெக்’ அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளான வங்காளதேசத்தின் ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீது, இலங்கை அதிபர் சிறிசேனா, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒளி, மியான்மர் அதிபர் யூ வின் மையின்ட், பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் ஆகியோரும் மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பிகோவ் ஆகியோரும், தாய்லாந்து நாட்டின் பிரதிநிதியும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளனர். விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Next Story