மோடி, அமித்ஷாவை ‘ஊடுருவல்காரர்கள்’ என்பதா? - காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கேட்க நாடாளுமன்றத்தில் பா.ஜனதா வலியுறுத்தல்


மோடி, அமித்ஷாவை ‘ஊடுருவல்காரர்கள்’ என்பதா? - காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கேட்க நாடாளுமன்றத்தில் பா.ஜனதா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Dec 2019 10:15 PM GMT (Updated: 2 Dec 2019 8:58 PM GMT)

பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை ஊடுருவல்காரர்கள் என்று கூறிய காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பா.ஜனதா வலியுறுத்தியது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நேற்றுமுன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவையும் ‘ஊடுருவல்காரர்கள்‘ என்று குற்றம் சாட்டினார். குஜராத்தில் பிறந்த அவர்கள், அங்கிருந்து இடம்பெயர்ந்து தற்போது டெல்லியில் வசித்து வருவதாக அவர் கூறினார்.

இந்நிலையில், நேற்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, உருக்கு அமைச்சகம் தொடர்பாக ஒரு துணைக்கேள்வி எழுப்ப முயன்றார். அப்போது, ஆளும் கூட்டணி உறுப்பினர்கள், அவரை பார்த்து ‘ஊடுருவல்காரர்‘ என்று கூறினர்.

உடனே, ஆத்திரம் அடைந்த சவுத்ரி, “ஆம். நான் ஊடுருவல்காரன்தான். பிரதமர் மோடியும் ஊடுருவல்காரர், அமித் ஷாவும் ஊடுருவல்காரர், அத்வானியும் ஊடுருவல்காரர்“ என்று கூறினார்.

அவரது பேச்சுக்கு பா.ஜனதா உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

பூஜ்ய நேரத்தின்போது, ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிராக பா.ஜனதா உறுப்பினர் உதய் பிரதாப்சிங் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசுகையில், “பா.ஜனதா தலைவர்களுக்கு எதிரான இத்தகைய கருத்துகளை ஏற்க முடியாது. பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் மட்டுமல்ல, இந்த நாட்டின் பெருமைக்குரியவர். சவுத்ரி, இந்த அவையின் மூத்த உறுப்பினர். ஆகவே, அவர் தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்“ என்று கூறினார்.

பா.ஜனதா உறுப்பினர்கள் பெரும்பாலானோர், மன்னிப்பு கேட்குமாறு சவுத்ரியை வற்புறுத்தினர்.

நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி அர்ஜுன்ராம் மெக்வால் ஆகியோரும் சவுத்ரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பிரகலாத் ஜோஷி பேசியதாவது:-

மோடி, அமித் ஷா ஆகியோரை ஊடுருவல்காரர்கள் என்று கூறியதை எல்லோரும் வன்மையாக கண்டிக்க வேண்டும். மோடி ஒரு தேசிய தலைவர். 2-வது முறையாக மக்கள் தீர்ப்பை பெற்றவர். அவரை விமர்சிப்பது, மக்களை அவமதிப்பதற்கு சமம்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கருத்தின் அடிப்படையில் பார்த்தால், காங்கிரஸ் கட்சியே ஒரு ஊடுருவல்காரரின் தலைமையில்தான் இயங்குவதாக கூற வேண்டி இருக்கும். சவுத்ரி, மேற்கு வங்காளத்தில் இருந்து டெல்லிக்கு வந்திருப்பதால், அவரையும் ஊடுருவல்காரர் என்று கூற முடியுமா? எனவே, பொறுப்புடன் பேச வேண்டும். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜனதா உறுப்பினர்களின் வற்புறுத்தல்களுக்கிடையே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விளக்கம் அளிக்க எழுந்தார். அவர் கூறியதாவது:-

நான் என்ன பொருளில் கூறினேன் என்பதை புரிந்து கொண்டு பா.ஜனதா உறுப்பினர்கள் பேச வேண்டும். என்னை பேச விடுங்கள்.

நானும், என் பெற்றோரும் வங்காள தேசத்தில் இருந்தோம். அங்கிருந்து மேற்கு வங்காளத்தில் குடியேறியபோது, எங்களிடம் எந்த ஆவணமும் இல்லை. ஏனென்றால், இது எங்கள் நாடு. எனவே, எந்த ஆவணத்துக்கும் அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இருப்பினும், சவுத்ரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதா உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனால், சபையை பிற்பகல் 2.15 மணிவரை சபாநாயகர் ஓம் பிர்லா தள்ளி வைத்தார்.

பிற்பகல் 2.15 மணிக்கு சபை கூடியபோது, மீண்டும் இப்பிரச்சினை எழுப்பப்பட்டது. பா.ஜனதா உறுப்பினர் நிஷிகாந்த் துபே இதை எழுப்பினார். அவருக்கு பா.ஜனதா உறுப்பினர்கள் சஞ்சய் ஜெய்ஸ்வால், ராஜேந்திர அகர்வால் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

ராஜேந்திர அகர்வால், “காங்கிரஸ் கட்சியே இத்தாலியில் இருந்து வந்தவரின் தலைமையில்தான் நடக்கிறது. திருமணத்துக்கு பிறகு கூட இந்திய குடியுரிமை பெற சோனியா காந்தி ஆர்வம் காட்டவில்லை“ என்று கூறினார். நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, “காங்கிரஸ் தலைவரே ஊடுருவல்காரர்தான்“ என்று கூறினார்.

அப்போது சபாநாயகர் இருக்கையில் இருந்த பா.ஜனதா உறுப்பினர் ரமா தேவி, சவுத்ரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். சோனியா காந்தி பற்றிய விமர்சனத்துக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கேட்காவிட்டால், சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைப்போம் என்று பிரகலாத் ஜோஷி எச்சரிக்கை விடுத்தார். அதன்பிறகும், சவுத்ரி மன்னிப்பு கேட்க முன்வரவில்லை. அதனால், வரிவிதிப்பு சட்ட திருத்த மசோதா, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


Next Story