மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும் - ஜெய்ராம் ரமேஷ் சொல்கிறார்


மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும் - ஜெய்ராம் ரமேஷ் சொல்கிறார்
x
தினத்தந்தி 5 April 2020 1:38 AM GMT (Updated: 5 April 2020 1:38 AM GMT)

மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு, இந்தியாவில் அமலில் இருந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டார்.

அந்த செய்தியில் அவர், “கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்கள் யாரும் தனியாக இல்லை. 130 கோடி இந்தியர்களும் ஒன்றுபட்டு இருக்கின்றனர். இதை எடுத்துக்காட்டும் வகையில், 5-ந்தேதி (இன்று) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து விட்டு, அகல்விளக்கு அல்லது டார்ச் விளக்கு அல்லது செல்போன் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இதை காங்கிரஸ் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வரிசையில் முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

மந்திரி பதவி உள்ளிட்ட பதவி வகித்து மின்துறையில் 30 ஆண்டுகளாக தொடர்பில் உள்ள ஒருவர், 5-ந் தேதி (இன்று) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து விடுமாறு பிரதமர் விடுத்துள்ள அழைப்பு, மின் கட்டமைப்பு மற்றும் அதன் நிலைத்தன்மையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்கிறார். இது சரியாக நிர்வகிக்கப்படும் என்று உண்மையிலேயே நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதே போன்ற கருத்துகளை மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசி தரூரும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட்டும் வெளியிட்டுள்ளனர்.


Next Story