காஷ்மீர்: பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் கண்டுபிடிப்பு - ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கு குழிகள் அமைத்து ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக பாதுக்காப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த ரகசிய தகவலையடுத்து ரஜோரி மாவட்டத்தின் மன்யல் பகுதியில் காஷ்மீர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். அந்த பதுங்கு குழிகளை ஆய்வு செய்த பாதுகாப்பு படையினர் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களில் ஏகே 47 ரக துப்பாக்கி, 4 கைத்துப்பாக்கிகள், துப்பாக்கிக்குண்டுகளும் அடக்கம். இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story