பெங்களூரு மெட்ரோ ரெயில்களில் கொரோனா விதிமீறல் - 6 நாட்களில் ரூ. லட்சம் அபராதம் வசூல்


பெங்களூரு மெட்ரோ ரெயில்களில் கொரோனா விதிமீறல் - 6 நாட்களில் ரூ. லட்சம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 13 July 2021 7:53 PM GMT (Updated: 13 July 2021 7:53 PM GMT)

பெங்களூரு மெட்ரோ ரெயில்களில் கொரோனா விதிகளை மீறிய பயணிகளிடம் 6 நாட்களில் ரூ.1¾ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டு பஸ்கள், மெட்ரோ ரெயில்கள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, பெங்களூரு மெட்ரோ ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகள் கண்டிப்பாக கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

முகக்கவசம் அணியாமல் இருத்தல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருத்தல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை மீறும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பெங்களூருவில் கடந்த 6 நாட்களில் மெட்ரோ ரெயில் பயணிகள் விதிமுறைகளை மீறியதாக ரூ.1 லட்சத்து 77 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5-ந் தேதியில் இருந்து கடந்த 10-ந் தேதி வரை மெட்ரோ ரெயில், ரெயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 77 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முகக்கவசம் அணியாத பயணிகளிடம் இருந்து தலா ரூ.250 அபராதம் வசூலிக்கப்படும் என்றும், அதனால் அனைத்து பயணிகளும் முகக்கவசம் அணியும்படியும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story