இந்தியாவில் 22 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கடந்த 4 வாரங்களில் 22 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,14,40,951 ஆக உள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 4,21,382 ஆக உள்ளது. இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,06,21,469 ஆக இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தற்போது குறைந்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 4 வாரங்களில் 7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், “நாடு முழுவதும் 62 மாவட்டங்களில் மட்டுமே தினசரி கொரோனா பாதிப்பு 100க்கும் மேல் உள்ளது. அதன்படி, கேரளா 7, மணிப்பூர் 5, மேகாலயா 3 ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பின் வார சராசரி தொடர்ந்து குறைந்து வருகிறது. இருப்பினும், கடந்த வாரங்களில் குறைந்த விகிதத்தை ஒப்பிடும்போது சற்று மெதுவாகவே குறைந்து வருகின்றது. இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.4% ஆக உயர்ந்துள்ளது” என்று லால் அகர்வால் கூறினார்.
Related Tags :
Next Story