சோனியா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பங்கேற்கிறார்: சிவசேனா அறிவிப்பு


சோனியா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பங்கேற்கிறார்: சிவசேனா அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Aug 2021 7:47 PM GMT (Updated: 13 Aug 2021 7:47 PM GMT)

சோனியா காந்தி தலைமையில் 20-ந் தேதி நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பங்கேற்க இருப்பதாக சிவசேனா தெரிவித்துள்ளது.

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமீப நாட்களாக ஒன்று திரண்டு உள்ளன.

நாடாளுமன்ற முடக்கம்
பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்த்த விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளில் நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு இரு அவைகளையும் முடக்கின. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் கடந்த வாரம் 15 எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினர். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அன்று நாடாளுமன்றத்தை நோக்கி சைக்கிள் பேரணி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. எதிர்க்கட்சிகளின் இந்த ஒற்றுமையை வருகிற நடாளுமன்ற தேர்லில் கூட்டணியாக மாற்றும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.

சோனியா காந்தி அழைப்பு
இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகிற 20-ந்தேதி எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். மெய்நிகர் முறையில் நடைபெறும் இந்த கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்படவில்லை. எனினும் பெகாசஸ் விவகாரம் தொடர்ந்து அரசியலில் புயலை கிளப்பி இருக்கும் சூழலில் நடைபெறும் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உத்தவ் தாக்கரே பங்கேற்பு
சோனியா காந்தி அழைப்பை ஏற்று இந்த கூட்டத்தில் சிவசேனா தலைவரும், மராட்டிய முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே கலந்து கொள்கிறார். இந்த தகவலை சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இதுவரை சிவசேனா அங்கம் வகிக்காத நிலையில் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சிவசேனா சேர வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் கலந்து கொள்ள இருப்பதாக சுப்ரியா சுலே எம்.பி. தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ்
கூட்டத்தில் பங்கேற்குமாறு திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கட்சித்தலைவர் மம்தா பானர்ஜியின் நெருக்கமான தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

சமீபத்தில் டெல்லி பயணம் மேற்கொண்டிருந்த மம்தா பானர்ஜி, சோனியா உள்பட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story