அசாம்: சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது


அசாம்: சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது
x
தினத்தந்தி 2 Oct 2021 11:22 PM GMT (Updated: 2 Oct 2021 11:22 PM GMT)

சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அசாம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார்.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தின் டரங் மாவட்டம் சிபஜ்கர் பகுதியில் கடந்த 23-ம் தேதி அரசு நிலத்தை ஆக்கிரமித்து வசித்துவந்த மக்களை போலீசார் அகற்ற முயற்சித்தபோது வன்முறை வெடித்தது. ஆக்கிரமிப்பு பகுதிகளில் குடியிருந்த மக்களுக்கும் போலீசுக்கும் இடையே வன்முறை வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையில், அசாமில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்காளதேசத்தினரை வெளியேற்ற வேண்டும் என்று 1979 முதல் 1985 வரை போராட்டங்கள் நடைபெற்றது. 

அதில், 1983-ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 8 பேரை சிபஜ்கர் பகுதியில் வசித்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் கொலை செய்ததாக ஆளும் பாஜக அரசில் இடம்பெற்றுள்ள சில கூட்டணி கட்சிகளை சேர்ந்த சில தலைவர்கள் கூறினர். 

ஆனால், 1983-ல் கொல்லப்பட்ட 8 பேரும் தியாகிகள் அல்ல... அவர்கள் கொலைகாரர்கள் என்று அசாமை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஷர்மன் அலி அகமது கூறினார். 

சிபஜ்ஹர் பகுதியில் வசித்து வந்த சிறுபான்மையினர் மீது அந்த 8 பேரும் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக தங்களை தற்காத்துக்கொள்ளும் விதமாக அப்பகுதியில் வசித்துவந்த இஸ்லாமிய மக்கள் அந்த 8 பேர் மீதும் தாக்குதல் நடத்தினர்’ என்றார். 

அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் எழுந்தது. பாஜக, அசாம் மாணவர்கள் மாணவர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எம்.எல்.ஏ. ஷர்மன் அலி அகமதுவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக அலி அகமது மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரை தொடர்ந்து எம்.எல்.ஏ. ஷர்மன் அலி அகமது மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அசாம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த எம்.எல்.ஏ. ஷர்மன் அலி அகமதுவை போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. அலியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story