உ.பி.யில் சமாஜ்வாதி கட்சிக்கு தாவிய மேலும் 4 பாஜக எம்.எல்.ஏக்கள்...!!


உ.பி.யில் சமாஜ்வாதி கட்சிக்கு தாவிய மேலும் 4 பாஜக எம்.எல்.ஏக்கள்...!!
x
தினத்தந்தி 14 Jan 2022 10:09 AM GMT (Updated: 14 Jan 2022 10:09 AM GMT)

உ.பி.யில் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் பாஜக எம்.எல்.ஏக்கள் 4 பேர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்

லக்னோ,

உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்கி மார்ச் மாதம் 7-ந் தேதிவரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க.வும், கைப்பற்ற எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியும் வரிந்து கட்டுகின்றன.

இந்த நிலையில், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மந்திரிசபையில் இருந்து பாஜக முன்னாள் தலைவரும், மந்திரியான (தொழிலாளர் நலத்துறை) சுவாமி பிரசாத் மவுரியா (வயது 68) மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தரம் சிங் சைனி, பகவதி சாகர் மற்றும் வினய் ஷக்யா ஆகியோருடன் இன்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். 

முன்னதாக ஆயுஷ்துறை மந்திரி தரம் சிங் சைனி ராஜினாமா செய்ததுடன், பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இதனையடுத்து  சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்தார். அவரை சமாஜ்வாதி கட்சிக்கு வரவேற்கிறேன் என அகிலேஷ் யாதவ் டுவீட் செய்திருந்தார். 

உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், கட்சி தாவல் தொடங்கி இருப்பது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் நேரத்தில் அடுத்தடுத்து மந்திரிகள், எம்.எல்.ஏக்கள் பதவி விலகி வருவது பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story