மக்களவையில் மேலும் 3 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!


மக்களவையில் மேலும் 3 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!
x

கோப்புப்படம் 

நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில், கடந்த புதன்கிழமை மக்களவையில் மதியம் 1 மணியளவில் நடந்த பூஜ்யநேர விவாதத்தின்போது, திடீரென பார்வையாளர்கள் வரிசையில் இருந்து 2 பேர் அவைக்குள் குதித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த வண்ணப்புகைகுண்டுகளை வீசியதால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையே, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இரு அவையிலும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 143 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மக்களவையில் இன்று மேலும் 3 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எச்சரிக்கையை மீறி மக்களவை நடவடிக்கைகளை முடக்க முயற்சித்த புகாரில் காங்கிரசை சேர்ந்த டி.கே.சுரேஷ், நகுல்நாத் மற்றும் தீபக் பைஜ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.


Next Story