சரக்கு வேன்-லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் சாவு


சரக்கு வேன்-லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் சாவு
x

சரக்கு வேன்-லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

கோலார் தங்கவயல்:

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா பூவேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 35). இவர் தனது கிராமத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றி கொண்டு சிந்தாமணி மார்க்கெட்டுக்கு சரக்கு வேனில் சென்றார். அவருடன் வெங்கடம்மா (30), நளினி (32), சந்தோஷ் (28) ஆகியோரும் சென்றனர். அப்போது சரக்கு வேன் சங்கேனஹள்ளி கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் எதிரே வந்த லாரியும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் சரக்கு வேன் அப்பளம் போல நொறுங்கியது.

இந்த விபத்தில் சரக்கு வேனில் பயணம் செய்த 4 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 4 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ், நளினி, வெங்கடம்மா, சந்தோஷ் ஆகிய 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிந்தாமணி புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணை நடத்தினர். இந்த விபத்து குறித்து சிந்தாமணி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story