சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி


சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
x
தினத்தந்தி 6 March 2024 8:18 AM GMT (Updated: 6 March 2024 11:12 AM GMT)

சிலிண்டர் வெடித்த விபத்தில் 5 பேர் பலியாகினர், 4 பேர் படுகாயமடைந்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள ககோரி பகுதியை சேர்ந்தவர் முஷிர். இவர் தனது குடும்பத்துடன் ஹதா ஹஸ்ரத் சஹாப் வார்டு பகுதியில் வசித்து வந்தார்.

மாவட்டத்தில் இன்று வெப்பம் அதிகமாக இருந்ததால் வீட்டில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்தது. இதனால் வீட்டின் மேற்கூரை மற்றும் சுவர் இடிந்து விழுந்தது. சிலிண்டர் வெடித்ததால் வீட்டில் தீ பற்ற தொடங்கியது. இந்த கோர தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து படுகாயமடைந்தவர்களை மீட்ட போலீசார் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவத்தில் முஷிர், அவரது மனைவி ஹுஸ்னா பானோ, மருமகள்கள் ஹினா, ஹுமா மற்றும் சாயா ஆகியோர் இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதில் அஜ்மத், முஷிரின் மகள்கள் லகாப், இன்ஷா மற்றும் அனம் ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story