இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் நிலச்சரிவு..!!


இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் நிலச்சரிவு..!!
x
தினத்தந்தி 15 Aug 2023 5:13 PM GMT (Updated: 15 Aug 2023 5:22 PM GMT)

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

சிம்லா,

இமாச்சல பிரதேச மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 53 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளதாக இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார். மேலும் சுதந்திர தினம் எளிய விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், எந்த கலாச்சார நிகழ்ச்சியும் நடைபெறவில்லை என்றும், போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், சண்டிகர்-சிம்லா 4-வழி நெடுஞ்சாலை மற்றும் பிற சாலைகள் திறக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து வான்வழி ஆய்வு நடத்திய அவர், "கங்கை நதியிலும் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது, இதைக் கருத்தில் கொண்டு, தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன" என்று சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.

முன்னதாக சிம்லாவில் இரண்டு நிலச்சரிவுகள் ஏற்பட்ட இடங்களிலிருந்து இதுவரை 14க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. டெராடூன், பவுரி, தெக்ரி, நைனிடால், மற்றும் உதம் சிங் நகர் ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிஷிகேஷில் நாட்டிலேயே அதிக அளவு மழை பெய்துள்ளது.

பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி ஆகிய புனிதத் தலங்களுக்குச் செல்லும் சாலைகள் நிலச்சரிவு காரணமாக சேதமடைந்துள்ளன. இதன் விளைவாக, சார்தாம் யாத்ரா என்று அழைக்கப்படும் புனித தலங்களுக்கான யாத்திரை இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தசூழலில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளநிலையில் இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story