7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: திரிபுராவில் வெற்றியை உறுதி செய்தது பா.ஜ.க.


7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: திரிபுராவில் வெற்றியை உறுதி செய்தது பா.ஜ.க.
x

Image Courtesy : ANI

தினத்தந்தி 8 Sep 2023 7:30 AM GMT (Updated: 8 Sep 2023 8:09 AM GMT)

திரிபுரா மாநிலம் போக்சாநகர், தன்பூர் தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றியை உறுதி செய்துள்ளது.

புதுடெல்லி,

கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி, திரிபுராவில் 2 தொகுதிகள், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு செப்டம்பர் 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் உத்தர பிரதேசத்தின் கோசி தொகுதி எம்.எல்.ஏ. தாராசிங், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்ததால் அந்த இடம் காலியானது. மற்ற தொகுதிகளின் உறுப்பினர்கள் மறைவால் அந்த இடங்கள் வெற்றிடமாகின.

இந்த நிலையில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி திரிபுரா மாநிலம் போக்சாநகர், தன்பூர் தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றியை உறுதி செய்துள்ளது. அதே போல் மேற்கு வங்காளத்தின் துக்புரி, உத்தரகாண்ட் மாநிலத்தின் பாகேஸ்வர் ஆகிய தொகுதிகளிலும் பா.ஜ.க. முன்னிலை வகிக்கிறது.

அதே சமயம் கேரளாவின் புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றியை உறுதி செய்துள்ளது. மேலும் உத்தர பிரதேசத்தின் கோசி தொகுதியில் சமாஜ்வாதி கட்சியும், ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்ரி தொகுதியில் ஏ.ஜே.எஸ்.யூ. கட்சியும் முன்னிலை வகித்து வருகின்றன.


Next Story