டிரைவர் இல்லாமல் 75 கி.மீ. ரெயில் ஓடிய விவகாரம்: விசாரணை அறிக்கை வெளியானது


டிரைவர் இல்லாமல் 75 கி.மீ. ரெயில் ஓடிய விவகாரம்: விசாரணை அறிக்கை வெளியானது
x

சரக்கு ரெயில் ஒன்று சுமார் 75 கி.மீ. தூரம், என்ஜின் டிரைவர் இல்லாமல் ஓடியது நாட்டையே பரபரப்பாக்கியது.

புதுடெல்லி,

சரக்கு ரெயில் ஒன்று கடந்த 25-ந் தேதி ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் இருந்து பஞ்சாப் மாநிலத்தின் உச்சி பஸ்சி வரை சுமார் 75 கி.மீ. தூரம், என்ஜின் டிரைவர் இல்லாமல் ஓடியது நாட்டையே பரபரப்பாக்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டு, மணல் மூட்டைகளின் உதவியுடன் ரெயில் தடுத்து நிறுத்தப்பட்டது.

ஓட்டுநர் இல்லாத ரெயில் மணிக்கு 70 முதல் 75 கி.மீ. வேகத்தில் இயங்கி, ஒன்பது ரெயில் நிலையங்களைக் கடந்துள்ளது. சுமார் 75 கி.மீ. தூரம் ஓடிய நிலையில் உச்சி பஸ்சியில் தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து மத்திய ரெயில்வே துறை தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டது. 5 மூத்த ரெயில்வே அதிகாரிகள் கொண்ட குழு விசாரணையில் இறங்கியது. அவர்கள் ரெயிலானது, டிரைவர் இன்றி இயங்கத்தொடங்கிய கதுவா நிலையம் முதல், ரெயில் தடுத்து நிறுத்தப்பட்ட இடம்வரை உள்ள பல்வேறு ரெயில் நிலையங்களில் பணியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதல்கட்ட விசாரணையில், என்ஜின் டிரைவர் மற்றும் ரெயில் நிலைய அதிகாரி ஆகியோர் பொறுப்பின்றி இருந்ததே தவறுக்கு காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

என்ஜின் டிரைவர் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், 'தான் ஹேண்ட் பிரேக்குகளை போட்டு ரெயிலை நிறுத்தி இருந்ததாகவும், மேலும் ரெயில் நகராமல் இருக்க சக்கரங்களில் மரக்கட்டை தடுப்புகளை வைத்ததாகவும்' கூறி உள்ளார்.

ஆனால் உச்சி பாஸ்சி ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டபோது அந்த ரெயில் நிலைய அதிகாரி, வீடியோ ஆதாரத்துடன் ஆய்வு செய்தார். அப்போது ஹேண்ட் பிரேக்குகள் போடப்படவில்லை என்று தெரியவந்ததாக கூறி உள்ளார். மேலும் பணியில் இருந்த கதுவா நிலைய அதிகாரி, காலை 6.05 மணி முதல் 7.10 மணி வரை ரெயில் சரியாக நிலை நிறுத்தப்பட்டு உள்ளதா, ஹேண்ட் பிரேக் போடப்பட்டுள்ளதா என்பதை சோதித்து உறுதி செய்யவில்லை என்றும் கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக ரெயில்வே கட்டுப்பாட்டு அறை அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தவறாக ஓடிய ரெயிலானது, ரெயில்வே தளவாடங்களை சுமந்து செல்லும் சரக்கு ரெயிலாகும். அது கதுவா ரெயில் நிலையத்தில் 53 பெட்டிகளுடன், கார்டு பெட்டி இல்லாத நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது. காலை 5.20 மணிக்கு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து ரெயில் நிலைய அதிகாரியிடம் ரெயிலை ஜம்முவுக்கு எடுத்துச்செல்லுமாறு டிரைவரிடம் சொல்லச்சொன்னதாகவும், ஆனால் ரெயிலில் கார்டு பெட்டியும், கார்டும் இல்லாததால் டிரைவர் மறுத்துவிட்டதாகவும் கட்டுப்பாட்டு அறை அறிக்கை கூறுகிறது. அதனால் டிரைவரை ரெயிலை நிறுத்திவிட்டு, வேறு ரெயிலில் ஜம்மு செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து காலை 6 மணி அளவில் ரெயில் நிலைய அதிகாரியிடம் சாவியை ஒப்படைத்துவிட்டு டிரைவர் ஜம்மு புறப்பட்டு சென்றார். அப்போதிருந்து காலை 7.10 மணி வரை ரெயிலில் ஆளில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த விபத்து தொடர்பாக பிரோஸ்பூா் கோட்ட ரெயில்வே மேலாளர், 6 ரெயில்வே அதிகாரிகளை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார்.


Next Story