மணிப்பூரின் பல மாவட்டங்களில் சிக்கிய ஆயுதங்கள், வெடிபொருட்கள்: பதற்றம் நீடிப்பு


மணிப்பூரின் பல மாவட்டங்களில் சிக்கிய ஆயுதங்கள், வெடிபொருட்கள்: பதற்றம் நீடிப்பு
x

மணிப்பூரின் பல மாவட்டங்களில் ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் சிக்கின. இதனால் அங்கு மீண்டும் பதற்றம் நீடித்து வருகிறது.

இம்பால்,

3 மாதங்களுக்கு மேலாக கலவரம் நீடித்து வரும் மணிப்பூரில் பாதுகாப்பு துறையினரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் சட்ட விரோத வெடிபொருட்களுக்கு எதிரான தேடுதல் வேட்டைகளை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து வருகின்றனர்.

இவ்வாறு பிஷ்ணுபூர், சூரச்சந்த்பூர், தெங்நவுபல், காங்போபி, இம்பால் மேற்கு மாவட்டங்களில் நேற்று நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சிக்கின.

குறிப்பாக 8 துப்பாக்கிகள், 112 ரவுண்டு தோட்டாக்கள், 6 வெடிகுண்டுகள் என ஏராளமான ஆயுதங்கள் சிக்கின. இதைப்போல தெங்நவுபல் மாவட்டத்தில் 6 பதுங்கு குழிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

மாநிலத்தின் பல பகுதிகளில் தற்போதும் விட்டுவிட்டு துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இதற்கிடையே இம்பால் மேற்கு மாவட்டத்தின் மந்திரிபுக்ரி பகுதியில் போதை மருந்துடன் வந்த 4 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அசாமை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் பணிகளை பாதுகாப்பு படையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story