காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி ஆணவக்கொலை செய்யப்பட்டது அம்பலம்


காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி ஆணவக்கொலை செய்யப்பட்டது அம்பலம்
x

துமகூருவில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக வேறு சாதி மாணவரை காதலித்ததால் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக அந்த மாணவியின் தந்தை, சகோதரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:-

வேறு சாதி மாணவருடன் காதல்

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குப்பி தாலுகா சிக்ககெடிகேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பரசுராம். இவரது மகள் நேத்ராவதி (வயது 17). இவர், சிராவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.யூ.சி. 2-வது ஆண்டு படித்து வந்தார். நேத்ராவதியும், அதே கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வந்த குமார்(21) என்பவரும் காதலித்து வந்தனர். ஆனால் குமார் வேறு சாதியை சேர்ந்தவர் ஆவார்.

இந்த காதல் விவகாரம் நேத்ராவதியின் பெற்றோருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள், காதலை கைவிடும்படி கூறி நேத்ராவதியை கண்டித்தனர். இதனை மறுத்த நேத்ராவதி தனது காதலில் உறுதியாக இருந்தார். இதற்கிடையில், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 7-ந் தேதி நேத்ராவதி வீட்டைவிட்டு வெளியேறி தனது காதலன் குமாருடன் ஓடிப்போக முடிவு செய்தார். அதன்படி 2 பேரும் வீட்டில் இருந்து ஓடிவிட்டனர்.

மாணவி தற்கொலை செய்ததாக...

பின்னர் குமார், நேத்ராவதியை அழைத்து வந்து 2 குடும்பத்தினரும் சமாதானமாக பேசினார்கள். அத்துடன் தங்களது மகளுடன் உள்ள காதலை கைவிடும்படி கூறி குமாரை எச்சரித்து நேத்ராவதியின் குடும்பத்தினர் அனுப்பி வைத்திருந்தனர். இந்த சம்பவம் நடந்த மறுநாள்(8-ந் தேதி) மாணவி நேத்ராவதி விஷம் குடித்து தற்கொலை செய்து விட்டதாக பரசுராம், அவரது குடும்பத்தினர் கூறினார்கள். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் தனது மகள் தற்கொலை செய்து விட்டதாக கிராம மக்களிடம் பரசுராம் கூறி இருந்தார்.

இதுபற்றி போலீசாருக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் மாணவி நேத்ராவதியின் உடலை பரசுராம், அவரது குடும்பத்தினர் எரித்து விட்டனர். ஆனால் மாணவி தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை, வேறு சாதி வாலிபரை காதலித்ததால் பரசுராமே கொலை செய்திருக்கலாம் என்று கிராம மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. இதுபற்றி கடந்த 9-ந் தேதி ஜேலூர் போலீஸ் நிலையத்தில் மாணவி சாவு குறித்து புகாரும் அளிக்கப்பட்டது.

தந்தை-சகோதரர் கைது

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள். அத்துடன் சிரா துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. முதலில் தங்களது மகள் தற்கொலை செய்திருப்பதாக தான் பரசுராம் கூறி வந்தார். இந்த விவகாரம் குறித்து கிராம மக்கள், மாணவியின் காதலன், குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பரசுராம் தான், அவரது மகளை கொலை செய்திருப்பது பற்றிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பரசுராமிடம் மீண்டும் விசாரணை நடத்திய போது தனது மகளை தான், மகன் மற்றும் உறவினர் சேர்ந்து ஆணவக்கொலை செய்து விட்டதாக கூறினார். அதைத்தொடர்ந்து, பரசுராம், அவரது மகன் சிவராஜ், பரசுராமின் சகோதரர் துக்காரம் ஆகிய 3 பேரையும் ஜேலூர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆணவக்கொலை

அதாவது நேத்ராவதி வேறு சாதி வாலிபரை காதலித்தது பரசுராம் மற்றும் அவரது மகனுக்கு பிடிக்கவில்லை. மேலும் அந்த வாலிபருடன் நேத்ராவதி வீட்டை விட்டு ஓடியது, அவர்களுக்கு ஆத்திரத்தை தூண்டியது. இதையடுத்து, கடந்த 8-ந் தேதி நேத்ராவதியின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்கள். அதன்பிறகு, அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பதாக கூறி நாடகமாடியதுடன், சாட்சி ஆதாரங்களை அழிக்கும் விதமாக நேத்ராவதியின் உடலை எரித்திருந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ஜேலூர் போலீசார் கொலை மற்றும் சாட்சிகளை அழித்ததாக வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆணவக்கொலை சம்பவம் குப்பியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story