மனைவி கண்எதிரே வாலிபர் படுகொலை


மனைவி கண்எதிரே வாலிபர் படுகொலை
x

பெலகாவி அருகே மனைவி கண்எதிரே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பெலகாவி:

பெலகாவி மாவட்டம் மூடலகி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் சங்கர் சித்தப்பா ஜகமுத்தா(வயது 25). இவரது மனைவி பிரியங்கா. இந்த தம்பதிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்திருந்தது. நேற்று அமாவாசை என்பதால் மூடலகி அருகே வடேரெட்டியில் உள்ள பனசித்தேஷ்வரா கோவிலில் சாமி தரிசனம் செய்ய தனது மனைவியுடன் சங்கர் வந்திருந்தார்.

நேற்று காலையில் கோவில் முன்பாக 2 பேரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சங்கரை சரமாரியாக வெட்டினார்கள். தன்னுடைய கண்எதிரேயே கணவரை மர்மநபர்கள் வெட்டி சாய்ப்பதை பார்த்து பிரியங்கா அலறி துடித்தார்.

சங்கரை கண்மூடித்தனமாக வெட்டிவிட்டு மர்மநபர்கள் ஓடிவிட்டனர். இதில், பலத்த வெட்டுக்காயம் அடைந்த சங்கர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். சங்கரின் உடலை பார்த்து பிரியங்கா கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதுபற்றி அறிந்ததும் மூடலகி போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து சங்கரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். சங்கரை கொலை செய்தது யார்?, என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து மூடலகி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story