அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஓபிஎஸ் அணி சார்பில் மேலும் 3 மனுக்கள் தாக்கல்


அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஓபிஎஸ் அணி சார்பில் மேலும் 3 மனுக்கள் தாக்கல்
x

இந்த மனுக்கள் அனைத்தும் ஒன்றாக இணைத்து அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி,

சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நீக்க தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்தது.

இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், உடனடியாக மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு, தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சார்பில், வக்கீல் கவுதம் சிவசங்கர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீடு மனுமீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் அணியில் உள்ள பி.மனோஜ் பாண்டியன், ஆர்.வைத்தியலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மேல்முறையீடு மனுக்கள் அனைத்தும் ஒன்றாக இணைத்து அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story