'கெஜ்ரிவால் கைதுக்கு பிறகு உலக அளவில் பா.ஜ.க. விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது' - அகிலேஷ் யாதவ்


கெஜ்ரிவால் கைதுக்கு பிறகு உலக அளவில் பா.ஜ.க. விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது - அகிலேஷ் யாதவ்
x

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு உலக அளவில் பா.ஜ.க. விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து 'இந்தியா' கூட்டணி கட்சிகள் சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு வந்த சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி நன்கொடை வசூலிப்பது பா.ஜ.க.வின் புதிய கண்டுபிடிப்பாகும். இந்த ஊழலைப் பற்றி பா.ஜ.க. எதுவும் பேசப்போவதில்லை. பா.ஜ.க.வைப் போல் இதுவரை யாரும் பொய்களை சொன்னதில்லை.

ஆட்சியில் இருந்து போகப்போவதை நினைத்து பா.ஜ.க. கவலை கொண்டுள்ளது. நாங்கள் அனைவரும் இன்று டெல்லிக்கு வந்துள்ள சமயத்தில், பிரதமர் மோடி டெல்லியை விட்டு செல்கிறார். டெல்லிக்கு யார் வரப்போகிறார்கள், டெல்லியை விட்டு யார் போகப்போகிறார்கள் என்பது இன்றே தெரிந்துவிட்டது.

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு உலக அளவில் பா.ஜ.க. விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அரசாங்கம் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது தெளிவாகிவிட்டது."

இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.


Next Story