இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் பாஜகவின் குதிரை பேர அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர் - நானா படோலே


இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் பாஜகவின் குதிரை பேர அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர் - நானா படோலே
x

Image Courtesy: PTI

மராட்டிய இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவின் குதிரை பேர அரசியலை மக்கள் நிராகரித்துள்ளதை காட்டுகிறது என காங்கிரஸ் தலைவர் நானா படோலே தெரிவித்துள்ளார்.

மும்பை,

மும்பை அந்தேரி கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி சார்பில் போட்டியிட்ட ருதுஜா லட்கே வெற்றி பெற்றுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறுகையில், அந்தேரி இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் அரசை நம்பவில்லை என்பதை காட்டுகிறது. தொகுதியில் உள்ள மக்கள் தங்கள் வாக்கு மூலம் மகா விகாஸ் அகாடி மீது தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர்.

மேலும், குதிரை பேரம் மற்றும் அரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் பாஜகவின் அரசியலை நிராகரித்துள்ளனர். அந்தேரியில் எம்.எல்.ஏ உயிரிழந்ததையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தல் என்பதால் வேட்பாளரை நிறுத்தவில்லை என பாஜக கூறுவது உண்மையில்லை.

கடந்த 2 ஆண்டுகளில் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் உயிரிழந்ததால் கோலாப்பூர், தெக்ளூர் மற்றும் பந்தர்பூர் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தியது.

சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை முடக்கும் ஏக்நாத் ஷிண்டே அணியினர் மற்றும் பாஜகவின் அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர், எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும், பாஜக மற்றும் ஷிண்டே அணியை மக்கள் தோற்கடிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story