திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரம்... தாயை கட்டையால் அடித்து கொன்ற மகன் கைது


திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரம்... தாயை கட்டையால் அடித்து கொன்ற மகன் கைது
x

தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி அனில், தாய் ஷோபாவிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி தாலுகா போச்சாவரா கிராமத்தை சேர்ந்தவர் ஷோபா (வயது 45). இவரது மகன் அனில் (22). கூலி தொழிலாளியான இவர், அளவுக்கு அதிகமாக மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல், எப்போதும் மது குடித்து வந்து தாய் ஷோபாவிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி அனில், தாய் ஷோபாவிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். ஆனால், மது குடித்து வந்தால் திருமணம் செய்து வைக்க முடியாது என ஷோபா தெரிவித்துள்ளார். இதனால் தாய்-மகன் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினமும் அனில் வழக்கம்போல் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போதும், தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தாய் ஷோபாவிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு ஷோபா மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அனில், வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து தாய் என்று கூட பாராமல் ஷோபாவை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ஷோபா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் குந்தாவரா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், ஷோபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், திருமணம் செய்து வைக்காததால் ஷோபாவை அவரது மகனே கட்டையால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து குந்தாவரா போலீசார் வழக்குப்பதிவு செய்து அனிலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story