சிக்கிம் மாநிலத்தில் 15-ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் என அறிவிப்பு


சிக்கிம் மாநிலத்தில் 15-ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் என அறிவிப்பு
x

Image Courtesy : ANI

சிக்கிம் மாநிலத்தில் வரும் 15-ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேங்டாக்,

சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் நேபாள எல்லை அருகே உள்ள லோனக் ஏரி பகுதியில் நேற்று முன்தினம் திடீர் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால், மிக குறுகிய நேரத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டியது. 5 நிமிடங்களுக்குள் மிகப் பெரிய அளவுக்கு மழை பெய்ததால் அங்குள்ள தீஸ்தா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ளம் கேங்டாக், மங்கன், பாக்கியாங், நாம்சி ஆகிய 4 மாவட்டங்களில் புகுந்து கடும் சேதங்களை ஏற்படுத்தியது. மேலும், மாநிலத்தில் 14 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் போக்குவரத்து முடங்கி உள்ளது.

தீஸ்தா நதி வெள்ளம் பாய்ந்துள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள். சிக்கிமில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிக்கிம் மாநிலத்தில் வரும் 15-ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படும் என அந்த மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. எதிர்பாராத மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க சிக்கிம் முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story