சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதியாக காட்சி அளித்தார் அய்யப்பன்: விண்ணை பிளந்த சரண கோஷம்


தினத்தந்தி 15 Jan 2024 1:28 PM GMT (Updated: 15 Jan 2024 1:59 PM GMT)

பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சி தந்தார்.

ழ்சபரிமலை,

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

41 நாட்கள் பூஜையின் சிகர நிகழ்ச்சியாக மண்டல பூஜை கடந்த மாதம் 27-ந் தேதி நடந்து முடிந்தது. மண்டல பூஜையின் போது 33 லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக 2 நாட்கள் கழித்து 30-ந் தேதி மீண்டும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜையை போன்றே மகர விளக்கு காலத்திலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தினமும் ஒரு லட்சம் வரை பக்தர்கள் திரண்டு வந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

பின்னர் கூட்ட நெரிசலை தவிர்க்க சில கட்டுப்பாடுகளையும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் விதித்தது. மேலும் மகரவிளக்கின் முந்தைய நாளில் 50 ஆயிரம் பேர், மகரஜோதி தரிசன நாளில் 40 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் மகரவிளக்கின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான மகரஜோதி தரிசனம் சரியாக 6.48 மணிக்குநடைபெற்றது. பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சி தந்தார். அந்த சமயத்தில் அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்பா.. சாமியே சரணம் அய்யப்பா என விண்ணதிர சரண கோஷம் எழுப்பினர்.

சபரிமலை, பாஞ்ச்சாலி மேடு, புல்லுறுமேறு, சரங்குத்தி, மரக்கூட்டம்,பண்டிதாளம் உள்ளிட்ட இடங்களில் மகரஜோதி தெரிந்தது. ஆபரணங்களை அணிந்து அரசனாக காட்சியளிக்கும் அய்யப்பனை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்பா என எழுப்பிய பக்தி முழக்கங்கள் சபரிமலை முழுவதும் எதிரொலித்தது. பாதுகாப்பு பணிக்காக பம்பை மற்றும் சன்னிதானத்தில் கூடுதலாக ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story