ராகுல் காந்தி பாதயாத்திரைக்கு போட்டியாக பசவராஜ்பொம்மை, எடியூரப்பா இன்று சுற்றுப்பயணம்...!


ராகுல் காந்தி பாதயாத்திரைக்கு போட்டியாக பசவராஜ்பொம்மை, எடியூரப்பா இன்று சுற்றுப்பயணம்...!
x

ராகுல் காந்தி பாதயாத்திரைக்கு போட்டியாகாக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை, எடியூரப்பா ஆகியோர் ராய்ச்சூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்கள்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) மே மாதம் தேர்தல் நடக்கவுள்ளது. இதனால் கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்க அக்கட்சி மேலிடம் விரும்புகிறது. இதற்கான நடவடிக்கையில் அக்கட்சி ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்திய ஒற்றுமைக்கான பாதயாத்திரையை ராகுல்காந்தி கர்நாடகத்தில் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கினார். அவர் மைசூரு, துமகூரு வழியாக நேற்று சித்ரதுர்காவில் தனது நடைபயணத்தை மேற்கொண்டார். அவரது பாதயாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதற்கு பதிலடியாகவும், சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டும் பா.ஜனதா மேலிடம் காங்கிரஸ் பாதயாத்திரைக்கு போட்டியாகவும் பா.ஜனதா ஆட்சி மன்ற குழு உறுப்பினர் எடியூரப்பா, முதல்-மந்திரி பசவராஜ்பொம்மையை களத்தில் இறக்க முடிவு செய்தது.

அதன்படி ஜன சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் எடியூரப்பா, பசவராஜ்பொம்மை ஆகியோர் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்கள், மக்களை சந்திக்க உள்ளனர். அவர்களின் சுற்றுப்பயணம் வடகர்நாடகத்தில் உள்ள ராய்ச்சூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் ராய்ச்சூரில் இருந்து தங்களது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளனர். 50 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்த 2 தலைவர்களும் முடிவு செய்து உள்ளனர்.

ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி, கொப்பல் மாவட்டம் குஷ்டகி, விஜயநகர் மாவட்டம் ஊவினஅடஹள்ளி, பல்லாரி மாவட்டம் சிருகுப்பாவில் அடுத்த 3 நாட்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள். அதன்பின்னர் 2 நாட்கள் ஓய்வுஎடுக்கும் பசவராஜ் பொம்மை மைசூருவில் 16-ந் தேதி நடக்கும் எஸ்.சி. சமூக மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதன்பின்னர் பீதர், யாதகிரி, கலபுரகி மாவட்டங்களில் பசவராஜ் பொம்மை சுற்றுப்பயணம் செய்கிறார்.

காங்கிரசுக்கு போட்டியாக பா.ஜனதாவும் சுற்றுப்பயணத்தை தொடங்குவதால் கர்நாடக தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.


Next Story