நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் பாபா ராம்தேவ் - சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை


நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் பாபா ராம்தேவ் - சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை
x

ராம்தேவ் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

கடந்த மாதம் 'பதஞ்சலி' நிறுவனம் மீது தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது என்று எச்சரித்த சுப்ரீம் கோர்ட்டு, பதிலளிக்க கோரி அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்தநிலையில், பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளுக்கான விளம்பரங்களில் தவறான தகவல்கள் வெளியிடுவது குறித்து சுப்ரீம் கோர்ட்டு அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளிக்காததால், அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவை நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்த நிலையில் யோகா குரு ராம்தேவ் கடந்த 2ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அப்போது, பிரமாண பத்திரம் திருப்தி அளிக்கவில்லை என நீதிபதிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.

ராம்தேவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவரும் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளனர். நீதிமன்றம் என்ன சொன்னாலும் அதை செய்ய தயாராக இருக்கிறோம் என்றார். மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதி கொடுத்துவிட்டு தப்பித்து விடலாம் என நினைக்காதீர்கள் என பாபா ராம்தேவ் தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், நீங்கள் செய்திருப்பது மிக தீவிரமான நீதிமன்ற அவமதிப்பு செயல், மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு தப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் காட்டத்துடன் தெரிவித்தனர். அத்துடன், புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய இருவருக்கும் ஒரு வாரம் அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 10-ம் தேதிக்கு (அதாவது இன்று) தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, ராம்தேவின் மன்னிப்பை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. "சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை வேண்டுமென்றே மீறியுள்ளதால், ராம்தேவ் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் ஏற்க முடியாது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்" என்று ராம்தேவுக்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை விடுத்தது.

மேலும், "பதஞ்சலி நிறுவனத்தின் மீது ஏன் உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பதஞ்சலி நிறுவன விவகாரத்தில் மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது?" என்றும் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

1 More update

Next Story