பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் - என்.ஐ.ஏ. அறிவிப்பு


பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் - என்.ஐ.ஏ. அறிவிப்பு
x

பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக தலைமறைவாக உள்ள 2 பேரை கைது செய்ய என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பெங்களூரு,

பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி, ஐ.டி.பி.எல். ரோட்டில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந்தேதி அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இதில், பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த குண்டுவெடிப்பு வழக்கில் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த முசபீர் உசேன் சாஜீப் மற்றும் அப்துல் மதீன் அகமது தாகா ஆகிய 2 பேருக்கும் தொடர்பு இருப்பதை என்.ஐ.ஏ. அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள 2 பேரை கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெங்களூரு குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வரும் முசபீர் உசேன் சாஜீப் மற்றும் அப்துல் மதீன் அகமது தாகா குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது. மேலும் தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் வெளியே கசியாமல் பாதுகாக்கப்படும் என்றும் (info.blr.nia@gov.in, 080-295 109 00, 890 424 1100) என்ற எண்களுக்கு தகவல் அளிக்கலாம் என்றும் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.


Next Story