தி.மு.கவின் உண்மையான எதிர்க்கட்சியாக பா.ஜனதா திகழ்கிறது: அமர்பிரசாத் ரெட்டி


தி.மு.கவின் உண்மையான எதிர்க்கட்சியாக பா.ஜனதா திகழ்கிறது: அமர்பிரசாத் ரெட்டி
x

சிறையின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வெளியிட தமிழ்நாடு சிறைத்துறை டி.ஜி.பிக்கு தைரியம் உள்ளதா? என்று அமர்பிரசாத் ரெட்டி பேசினார்.

சென்னை,

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பனையூர் வீட்டின் அருகே இருந்த கொடி கம்பம் அகற்றப்பட்டதற்கு எதிரான போராட்டத்தின்போது, கல்வீச்சு சம்பவம் நடந்தது. இது தொடர்பாக பா.ஜனதா நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அமர்பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து, இன்று புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, அமர்பிரசாத் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.கவின் உண்மையான எதிர்க்கட்சியாக பா.ஜனதா திகழ்கிறது. குள்ளநரிகளை கண்டு நாங்கள் அஞ்சமாட்டோம். சிறையில் என்னை சந்தித்த காவலர் ஒருவர், உதயநிதி ஸ்டாலின் குறித்தும், முதல்-அமைச்சர் குறித்தும் எதுவும் பேச வேண்டாம் என்று கூறினார். எங்களுக்கு பயம் காண்பிக்க முடியாது. தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு பா.ஜனதா நிச்சயம் ஆட்சி அமைக்கும்.

எனக்கு சளி தொல்லையும், ரத்த உயர் அழுத்தம் காணப்பட்டது. ஆனால், சிறையில் உள்ள மருத்துவ முகாமிற்கு என்னை அழைத்து செல்லவில்லை. மருத்துவ முகாமில் 'ஏ.சி' வசதியுடன் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்கு டாக்டர்கள் அறை இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் என்ன? யார் அங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து சிறை கண்காணிப்பாளர் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? புழல் சிறையின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வெளியிட தமிழ்நாடு சிறைத்துறை டி.ஜி.பிக்கு தைரியம் உள்ளதா? அப்போது, செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்படும் வசதிகளை அறிந்துக் கொள்ளலாம் இவ்வாறு அவர் கூறினார்.


Next Story