தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே 2 மாநிலங்களுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பா.ஜனதா


தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே 2 மாநிலங்களுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட  பா.ஜனதா
x
தினத்தந்தி 17 Aug 2023 11:22 AM GMT (Updated: 17 Aug 2023 12:14 PM GMT)

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களுக்கு முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜனதா அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே பா.ஜனதா வேட்பாளர்களின் முதல் பட்டியலை இன்று அறிவித்துள்ளது.

90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்கார் மாநில சட்டசபை தேர்தலுக்கு 21 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலையும், 230 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டசபைக்கு 39 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலையும் பா.ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் வியூகங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜனதாவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வியை தழுவியது. இதை தொடர்ந்து வரும் 5 மாநில சட்டசபை தேர்தலில் தோல்வியை தவிர்க்க முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுடன் சத்தீஷ்கார் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இவற்றில் சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கின்றன. மிசோரமில், மணிப்பூர் கலவரத்தை அடுத்து, கூட்டணிக் கட்சி மற்றும் ஆளும் கட்சியான மிசோ தேசிய முன்னணியுடனான பா.ஜனதாவின் கூட்டணி முறிந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா மற்றும் காங்கிரசுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story