வெளிநாட்டு மண்ணில் பிரதமரை விமர்சிப்பதா? ராகுல் மீது பா.ஜ.க. பாய்ச்சல் '


வெளிநாட்டு மண்ணில் பிரதமரை விமர்சிப்பதா? ராகுல் மீது பா.ஜ.க. பாய்ச்சல்
x
தினத்தந்தி 22 May 2022 1:28 AM GMT (Updated: 22 May 2022 1:28 AM GMT)

இந்தியாவுக்கு ராகுல் காந்தி தீங்கு செய்கிறார். வெளிநாட்டு மண்ணில் நாட்டைப் பற்றி அவர் அடிக்கடி விமர்சிப்பது, நாட்டை காட்டிக்கொடுப்பதாகும் என பாஜக சாடியுள்ளது.

புதுடெல்லி,

இங்கிலாந்தில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடியையும், பா.ஜ.க.வும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார். இதற்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்தது.இதுபற்றி அந்த கட்சியின் செய்திதொடர்பாளர் கவுரவ் பாட்டியா கருத்து தெரிவிக்கையில், "பிரதமர் மோடிக்கு எதிரான வெறுப்பால் இந்தியாவுக்கு ராகுல் காந்தி தீங்கு செய்கிறார். வெளிநாட்டு மண்ணில் நாட்டைப் பற்றி அவர் அடிக்கடி விமர்சிப்பது, நாட்டை காட்டிக்கொடுப்பதாகும்" என சாடினார்.

ராகுல் காந்தி இந்திய வெளியுறவு சேவை பற்றி கருத்து தெரிவிக்கையில், "நான் ஐரோப்பாவை சேர்ந்த சில அதிகாரிகளிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இந்திய வெளியுறவுச்சேவை முற்றிலும் மாறிவிட்டது. அவர்களை எதையும் கேட்பதில்லை. அவர்கள் திமிரானவர்கள். பேசுவதற்கு இடம் இல்லை என தெரிவித்தனர்" என்று கூறினார். இதற்கு மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பதில் அளிக்கையில், " ஆமாம். இந்திய வெளியுறவு சேவை மாறிவிட்டது. அவர்கள் அரசின் உத்தரவுகளைப் பின்பற்றுகிறார்கள். மற்றவர்களின் வாதங்களுக்கு பதில் அளிக்கிறார்கள். இது திமிரல்ல. இது நாட்டு நலனை பாதுகாப்பதாகும்" என கூறினார்.


Next Story