பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரிக்கு புதிய பொறுப்பு: எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்


பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரிக்கு புதிய பொறுப்பு: எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்
x

ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக அக்கட்சியின் எம்பி ரமேஷ் பிதுரி நியமிக்கப்பட்டிருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

புதுடெல்லி,

தெற்கு டெல்லி தொகுதியின் பாஜக எம்.பியான ரமேஷ் பிதுரி. இவர் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் சந்திரயான் 3 குறித்த விவாதத்தின் போது, சக எம்.பியான பகுஜன் சமாஜ் கட்சியின் டேனிஷ் அலியை நோக்கி கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ரமேஷ் பிதுரியின் பேச்சு 'இஸ்லாமிய வெறுப்பு பேச்சு' என பல்வேறு அரசியல் கட்சிகள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தன. ரமேஷ் பிதுரியின் பேச்சுக்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருத்தம் தெரிவித்தார். அதேபோல், சபாநாயகர் ஓம் பிர்லாவும் கடுமையான எச்சரிக்கையை ரமேஷ் பிதுரிக்கு விடுத்தார். அதோடு, ரமேஷ் பிதுரியிடம் விளக்கம் கேட்டு பாஜக நோட்டீஸ் அனுப்பியிருந்தது.நாடாளுமன்றத்தில் சக உறுப்பினர் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்திய ரமேஷ் பிதுரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக எம்பி ரமேஷ் பிதுரியை அக்கட்சி நியமித்துள்ளது. வெறுப்பு பேச்சுக்கான வெகுமதியாக புதிய பொறுப்பை ரமேஷ் பிதுரிக்கு பாஜக கொடுத்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. இதுகுறித்து, மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, "வெறுப்பு பேச்சுக்கு பாஜக வெகுமதி கொடுத்துள்ளது. ரமேஷ் பிதுரியை ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்க் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக்கி பரிசு கொடுத்துள்ளது. டோங்கில் முஸ்லிம் மக்கள் தொகை 29.25 சதவீதம். இது அரசியல் பலன்களுக்கான வெறுப்பினை அடையாளப்படுத்தும் வகையில் உள்ளது" என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்" இது எல்லாம் அவர்களின் முட்டாள் தனம் என்று தெரிவித்துள்ளார்.


Next Story