ரூ.1.39 லட்சம் கோடியில் 6.40 லட்சம் கிராமங்களுக்கு 'பிராட்பேண்ட்' இணைப்பு திட்டத்திற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்


ரூ.1.39 லட்சம் கோடியில் 6.40 லட்சம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் இணைப்பு திட்டத்திற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்
x

‘பாரத்நெட்’ திட்டத்திற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கிராமப்புற பகுதிகளுக்கு தொலைத்தொடர்பு வசதி வழங்கும் உலகின் மிகப் பெரிய திட்டங்களுள் ஒன்றாக 'பாரத்நெட்' திட்டம் உள்ளது. கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், நாட்டின் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளுக்கு பிராட்பேண்ட் (அகல்கற்றை) இணைய இணைப்பு வசதி வழங்கப்படும். தற்போதுவரை சுமார் ஒரு லட்சத்து 94 ஆயிரம் கிராமங்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கிராமங்களையும் 2½ ஆண்டுகளில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில், ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 579 கோடியில் 6 லட்சத்து 40 ஆயிரம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் இணைய இணைப்பு வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம், நாட்டில் உள்ள ஏறக்குறைய அனைத்து கிராம வீடுகளுக்கும் கடைசி மைல் கண்ணாடி இழை கேபிள் இணைப்பு வழங்கப்படும்.

மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் துணை நிறுவனமான பாரத் பிராட்பேண்ட் நெட்ஒர்க் நிறுவனம் (பி.பி.என்.எல்.), கிராமப்புற அளவிலான தொழில்முனைவோருடன் இணைந்து இந்த வசதியை வழங்கும். இதில் முன்னோடி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், தற்போதைய திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. தொடக்கமாக நாட்டில் 4 மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்ட முன்னோடி திட்டம், பின்னர் பல்வேறு மாநிலங்களில் 60 ஆயிரம் கிராமங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

கிராமப்புற பகுதிகளுக்கு பிராட்பேண்ட இணைய இணைப்பு வழங்கும் திட்டத்தால், அப்பகுதி மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடைந்து வருகிறது. 6 லட்சத்து 40 ஆயிரம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் இணைப்பு திட்டத்தால் 2½ லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story