பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாக வழக்கு: காஷ்மீரில் 11 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை


பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாக வழக்கு: காஷ்மீரில் 11 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
x

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்யப்படுவது தொடர்பாக காஷ்மீரில் 11 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தியது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரை சேர்ந்த ஜமாத் இ இஸ்லாமி பயங்கரவாத இயக்கத்தை கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு தடை செய்தது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் (உபா) இந்த தடை விதிக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு தடை உத்தரவு அமலில் இருக்கும்.

இதற்கிடையே, தடை செய்யப்பட்ட ஜமாத் இ இஸ்லாமி இயக்கம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்து வருவதாக தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) ரகசிய தகவல் கிடைத்தது.

எனவே, அதுதொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று காஷ்மீரில் அதிரடி சோதனை நடத்தினர். பட்கம், பாரமுல்லா ஆகிய மாவட்டங்களில் 11 இடங்களில் சோதனை நடந்தது.

காஷ்மீரில், ஜி20 நாடுகள் அமைப்பின் சுற்றுலா பணிக்குழு கூட்டம் 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடக்கும் முதலாவது மிகப்பெரிய சர்வதேச நிகழ்ச்சி இதுவாகும்.

அதையொட்டி, பயங்கரவாதிகள், அவர்களது ஆதரவாளர்கள், நிதியுதவி செய்பவர்கள் ஆகியோருக்கு எதிரான வேட்டையை என்.ஐ.ஏ. முடுக்கி விட்டுள்ளது.

கடந்த 9-ந் தேதி, காஷ்மீரில் புதிதாக தொடங்கப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக 16 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது. 10-ந் தேதி, பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொர்புடைய 3 பயங்கரவாதிகளின் சொத்துகளை என்.ஐ.ஏ. முடக்கியது.


Next Story