காவிரி நதிநீர் விவகாரம்: டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்


காவிரி நதிநீர் விவகாரம்: டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
x

கூட்டத்தில் பங்கேற்க தமிழகம், கேரளா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில், காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழகம், கேரளா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 30-ந்தேதி காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 89-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகளும் அந்தந்த மாநிலங்களில் இருந்து கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட ஒழுங்காற்றுக்குழு அதிகாரிகள், வருகிற 15-ம் தேதி வரை வினாடிக்கு 2,600 ஆயிரம் கனஅடி வீதம் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தண்ணீரை திறந்து விட வேண்டும் என முடிவு செய்து அதனை கர்நாடக அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். இதனை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் பரிந்துரைத்தனர்.

ஆனால், எங்களிடம் போதிய தண்ணீர் இல்லை எனக்கூறி இந்த பரிந்துரையை கர்நாடகா தரப்பு மறுத்தது. இந்த நிலையில், இன்று நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Next Story