ராஜமுந்திரி சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு விடுவிப்பு


ராஜமுந்திரி சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு விடுவிப்பு
x

ஆந்திர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவிற்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ராஜமுந்திரி,

ஆந்திர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சிக்காலத்தில் நடந்ததாக கூறப்படும் திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் கடந்த மாதம் 9-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த ஊழலால், அரசுக்கு ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது என குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜமுந்திரி சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், விஜயவாடாவில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறைக்கான கோர்ட்டு, இந்த ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவின் காவலை, நவம்பர் 1-ந்தேதி(நாளை) வரை நீட்டித்து உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் கடந்த 50 நாட்களுக்கு மேல் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்திரபாபு நாயுடு, தனக்கு பார்வை கோளாறு மற்றும் உடல்நிலை சரியில்லாததால், மருத்துவ சிகிச்சை பெற ஜாமீன் வழங்கக் கோரி ஆந்திரா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, சந்திரபாபு நாயுடுவிற்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

அதன்படி ஆந்திர முன்னாள் முதல் -மந்திரி சந்திரபாபு நாயுடு 53 நாட்களுக்கு பின்னர் ராஜமுந்திரி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் குடும்பத்தினர் சிறைக்கு வெளியே இருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story