சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 13 முதல் 19 தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும்; இஸ்ரோ அறிவிப்பு


சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 13 முதல் 19 தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும்; இஸ்ரோ அறிவிப்பு
x

சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 13-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் அறிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவு குறித்து ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி நிலவுக்கு 'சந்திரயான்-1' என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இது உலக நாடுகளை ஆச்சரியத்தில் தள்ளியது.

நிலவில் செய்த ஆய்வில் அங்கு தண்ணீர் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டது. கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 22-ந் தேதி சந்திரயான்-2 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது.

எனினும், தென் துருவத்தில் விக்ரம் லேண்டரின் மெதுவான தரையிறக்கம் (சாப்ட் லேண்டிங்) சவாலாக மாறியது. சந்திரயான்-2 கடைசி கட்டத்தில் நிலவில் இறங்கும் போது அதன் கட்டுப்பாட்டை இழந்து நிலவுடன் மோதியது.

இதனால் சந்திரயான்-2 பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தோல்வியில் துவண்டுவிடாமல் தொடர்ந்து ரூ.615 கோடி செலவில் சந்திரயான்-3 திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் நிறைவு செய்து உள்ளனர்.

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் தற்போது எல்.வி.எம். 3 ராக்கெட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலம் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்படுகிறது.

இந்த ராக்கெட் 43.5 மீட்டர் நீளமும், 640 டன் எடையும் கொண்டது. திட, திரவ, கிரையோஜெனிக் என 3 நிலைகளில் எரிபொருள் உதவியால் ராக்கெட் விண்ணில் பாயும். மார்க்-3 ராக்கெட்டின் அனைத்து பரிசோதனைகளும் நிறைவு பெற்று தயார் நிலையில் உள்ளது.

தொடர்ந்து, ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து அதிக எடையை தாங்கி செல்லும் மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் வரும் 13-ந் தேதி (வியாழக்கிழமை) மதியம் 2.30 மணி அளவில் விண்ணில் பாய்கிறது. இதற்கான அனைத்து சோதனைகளும் நடந்து முடிந்த நிலையில் விண்ணில் ஏவுவதற்கான பணி தற்போது தொடங்கியுள்ளது என கூறினார்.

இந்நிலையில், இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் நேற்று (திங்கட் கிழமை) கூறும்போது, சந்திரயான் 3 விண்கலம் ஜூலை 13-ந்தேதி விண்ணில் செலுத்தப்படும் என கூறினார். எனினும் விண்கலம் ஏவும் பணி ஜூலை 19-ந்தேதி வரை கூட செல்லும் என்று கூறியுள்ளார்.

கடந்த ஜூன் 28-ந்தேதி அவர் கூறும்போது, சந்திரயான்-3 விண்கலம் வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி முதல் 19-ந்தேதிக்குள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் என கூறினார்.

விண்கலம் முழு அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. பரிசோதனைகள் நிறைவடைந்து உள்ளன. அனைத்து பரிசோதனைகளும் நிறைவடைந்த பின்னரே சரியான தேதி அறிவிக்கப்படும் என அப்போது அவர் கூறினார். இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 13-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் அறிவித்து உள்ளார்.


Next Story