'எரியும் தீயில் எண்ணெய் ஊற்றாதீர்கள்' - அமெரிக்காவை மறைமுகமாக சாடிய சீனா


எரியும் தீயில் எண்ணெய் ஊற்றாதீர்கள் - அமெரிக்காவை மறைமுகமாக சாடிய சீனா
x

கோப்புப்படம்

எரியும் தீயில் எண்ணெய் ஊற்றாதீர்கள் என்று அமெரிக்காவை சீனா மறைமுகமாக சாடியுள்ளது.

பீஜிங்,

உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா போரை தொடங்கியதும் உலக நாடுகள் பலவும் இது ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கை என கூறி ரஷியாவை கண்டித்தன. ஆனால் ரஷியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனா ரஷியாவை கண்டிக்கவில்லை. மேலும் ரஷியாவுடனான உறவில் எந்த மாற்றமும் இல்லை எனவும் சீனா தெரிவித்தது. இதனை தொடர்ந்து போரில் ரஷியாவுக்கு ஆதரவாக சீனா இருப்பதாகவும், ஆயுதங்களை வழங்கி வருவதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் இதை சீனா திட்டவட்டமாக மறுக்கிறது.

இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ரஷியாவுக்கு ஆயுதங்களை வழங்கினால் சீனா மிகவும் மோசமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அமெரிக்கா பகிரங்கமாக எச்சரித்தது.

இந்த நிலையில் சீனா தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி கின் காங் உக்ரைன் போர் குறித்து பேசுகையில், "நாங்கள் தொடர்ந்து நல்லிணக்கத்தை ஊக்குவிப்போம் மற்றும் பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவோம். உக்ரைன் நெருக்கடிக்கு அரசியல் தீர்வுக்கான சீனாவின் ஞானத்தை பகிர்ந்துகொள்வோம். சர்வதேச சமூகத்துடன் இணைந்து உரையாடல் மற்றும் ஆலோசனைகளை மேம்படுத்துவது, அனைத்து தரப்பு கவலைகளையும் நிவர்த்தி செய்வது மற்றும் பொதுவான பாதுகாப்பை அடைவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "போரில் தொடர்புடைய சில நாடுகள் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதை நிறுத்த வேண்டும். சீனா மீது பழிபோடுவது மற்றும் வெறுப்பை திணிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். 'இன்று உக்ரைன், நாளை தைவான்' என்ற அறிக்கைகளுடன் சீனாவுடன் வம்பு செய்வதையும் குறிப்பிட்ட நாடுகள் நிறுத்த வேண்டும்" என தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன்தினம் திடீர் பயணமாக உக்ரைனுக்கு சென்ற நிலையில், 'எரியும் தீயில் எண்ணெய் ஊற்றாதீர்கள்' என அமெரிக்காவை சீனா மறைமுகமாக சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story