கோலார் தொகுதியில் போட்டியிட சித்தராமையாவுக்கு வாய்ப்பு மறுப்பு


கோலார் தொகுதியில் போட்டியிட சித்தராமையாவுக்கு வாய்ப்பு மறுப்பு
x

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரசின் 3-வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இதில் கோலாரில் சித்தராமையாவுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் கட்சி மேலிடம் மீது அதிருப்தி அடைந்துள்ளார்.

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

3-வது பட்டியல் வெளியீடு

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 13-ந் தேதியே தொடங்கியது. ஆனாலும் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் முழுமையான வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியாகாமல் இருந்து வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி முதற்கட்டமாக 124 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 42 தொகுதிளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

ஒட்டு மொத்தமாக 166 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்திருந்தது. மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில், நேற்று 43 தொகுதிகளுக்கான 3-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருக்கிறது. இதன்மூலம் அந்த கட்சி சார்பில் இதுவரை 209 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

சித்தராமையா போட்டி இல்லை

நேற்று வெளியான 3-வது கட்ட வேட்பாளர் பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலார் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த தொகுதியில் கொத்தூர் ஜி.மஞ்சுநாத் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தான் கோலாரில் போட்டியிடுவதாக அறிவித்து இருந்தார். ஆனால் அங்கு வெற்றி அவ்வளவு எளிதல்ல என கூறி கட்சி மேலிடம் அவரை வருணா தொகுதியில் வேட்பாளராக களமிறக்கி உள்ளது. மேலும் கோலார் தொகுதியிலும் அவரே வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இதனால் சித்தராமையா வருணா மற்றும் கோலார் தொகுதியில் போட்டியிட தயாராகி வந்தார்.

வருணா தொகுதியில் சித்தராமையாவுக்கு எதிராக பா.ஜனதா சார்பில் சோமண்ணா நிறுத்தப்பட்டுள்ளதால், கோலாரில் சித்தராமையா போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று வெளியான பட்டியலில் சித்தராமையா, கோலாரில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் இந்த சட்டசபை தேர்தலில் சித்தராமையா வருணா தொகுதியில் மட்டுமே போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

லட்சுமண் சவதிக்கு வாய்ப்பு

தனக்கு ஒரே ஒரு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பளித்து இருப்பதால் சித்தராமையா அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் பா.ஜனதாவில் இருந்து விலகி நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதிக்கு பெலகாவி மாவட்டம் அதானி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல், ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்திருந்த சிவலிங்கேகவுடாவுக்கு அரிசிகெரே தொகுதியிலும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திரதாலா தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு இருந்த முன்னாள் மந்திரி உமாஸ்ரீக்கு சீட் கொடுக்கப்படவில்லை. எடியூரப்பா மகன் விஜயேந்திராவுக்கு எதிராக சிகாரிப்புரா தொகுதியில் ஜி.பி.மால்தேசுக்கும், ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் பா.ஜனதா வேட்பாளர் சி.பி.யோகேஷ்வருக்கு எதிராக கங்காதரும் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

அதுேபால் குமட்டா தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி மார்க்ரெட் ஆல்வாவின் மகன் நிவேதித் ஆல்வாவுக்கும், மூடிகெரே தொகுதியில் முன்னாள் மந்திரி மோட்டம்மாவின் மகள் நயனா ஜோதி ஜாவரும் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் 43 தொகுதிகளுக்கான பட்டியலில் 16 புதுமுகங்கள் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது.

இன்னும் 15 தொகுதிகளுக்கு மட்டும்...

காங்கிரஸ் கட்சி இதுவரை 209 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளதால், இன்னும் 15 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவிக்க வேண்டி இருக்கிறது. அந்த 15 தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் பிரமுகர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதாலும், பா.ஜனதா 3-வது கட்ட பட்டியல் வெளியான பின்பு, 15 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏனெனில் பா.ஜனதாவில் சீட் கிடைக்காமல் சில தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கூட அதிருப்தியில் இருக்கிறார். அவருக்கு சீட் கிடைக்காமல் காங்கிரசுக்கு வந்தால் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் சீட் கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபோல் காங்கிரசில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருப்பவர்கள் மாற்று கட்சிக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.


Next Story