எதிர்க்கட்சிகளின் கூட்டணி, காங்கிரசை மையமாகக் கொண்டு அமைய வேண்டும் - கபில் சிபல் பரபரப்பு பேட்டி


எதிர்க்கட்சிகளின் கூட்டணி, காங்கிரசை மையமாகக் கொண்டு அமைய வேண்டும் - கபில் சிபல் பரபரப்பு பேட்டி
x

கோப்புப்படம்

அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி காங்கிரசை மையமாகக் கொண்டு அமைய வேண்டும் என்று கபில் சிபல் தெரிவித்தார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி, 'இன்சாப்' என்ற அமைப்பை நடத்தி வருகிற முன்னாள் மத்திய மந்திரி கபில் சிபல் எம்.பி., செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. தற்போதைய தருணத்தில், எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு யார் தலைவர் என்ற பிரச்சினைக்கு பதில் அளிக்க தேவையில்லை.

2004-ம் ஆண்டு, அடல் பிகாரி வாஜ்பாய் அரசு தோல்வியைத் தழுவியபோது, எதிர்க்கட்சிகளுக்கு தலைவர் என்று ஒரு முகம் கிடையாது.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தமட்டில், பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்கு எந்த ஒரு கூட்டணி என்றாலும் அது காங்கிரஸ் கட்சியை மையமாகக் கொண்டுதான் இயங்க வேண்டும்.

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை

ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி கருத்துகள் இருக்கும். அதை நாம் அனுமதிக்க வேண்டும். ஒருவர் மீது ராகுல் காந்திக்கு என்று தனிப்பட்ட கருத்து இருக்கும். அதை நாம் அனுமதிக்க வேண்டும். அதைப்போன்றுதான் சரத்பவாருக்கு அவருக்கென்று ஒரு கருத்து இருக்கும். அதை அனுமதிக்க வேண்டும். அது ஒற்றுமையின்மைக்கு உதாரணம் ஆகி விடாது. பரந்த அளவில் கருத்தொற்றுமை ஏற்படுகிறபோது, எதிர்க்கட்சிகள் ஒற்றுமை சாத்தியப்படும்.

உள்ளபடியே, ஒட்டுமொத்த அரசியல் சாசனமும் நீதியை எப்படி அடைவது என்பதைத்தான் விவரிக்கிறது. எனவே அநீதிக்கு எதிரான போராட்டம் பொதுவான ஒரு தளமாக இருக்க முடியும்.

மாறுபட்ட பின்னணிகளைக் கொண்டுள்ள அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு, 2024 தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள ஒன்றுக்கொன்று இடங்களை விட்டுக்கொடுப்பது நடைமுறையில் சாத்தியமா என்று கேட்கிறீர்கள்.

ராகுல் காந்தி பதவி பறிப்பு விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டுப்போராட்டம் நடத்தியது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் பிரதிபலிப்பு என்று கூறி விட முடியாது. எதிர்க்கட்சிகளின் ஒன்றுமைக்கு இது முதல் படி.

அரசியல் கட்சிகள் மிகவும் தாராளமாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு கட்சி மற்றொரு கட்சியின் கொள்கைகளை விமர்சிக்கிறபோது எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். தாங்கள் எங்கே எல்லாம் பலவீனமாக இருக்கிறோம் என்பதை அவர்கள் உணர்ந்து, அங்கே செல்வாக்கு மிக்கவர்கள் கூறுவதை அனுமதிக்க வேண்டும்.

நாட்டு மக்களை வாயடைத்து ஜனநாயக நாட்டை எதேச்சதிகார நாடாக மாற்றுவதில் குறியாக இருக்கும் மத்திய அரசை எதிர்த்து போராட எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும். ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகளுக்கு பொதுவான குறைந்தபட்ச திட்டம் என்பது அவசியமானதாகும். இது தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் சாத்தியப்படும் என்று அவர் கூறினார்.


Next Story