காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்தியாவில் பார்வையாளர்கள் இல்லை; அதனால் வெளிநாடு போகிறார்கள்: மத்திய மந்திரி காட்டம்


காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்தியாவில் பார்வையாளர்கள் இல்லை; அதனால் வெளிநாடு போகிறார்கள்:  மத்திய மந்திரி காட்டம்
x

காங்கிரஸ் தலைவர்கள் பேச்சை கேட்க இந்தியாவில் ஆளில்லை என்பதனால் வெளிநாட்டுக்கு போய் அறையில் கூடி பேசுகிறார்கள் என மத்திய மந்திரி ஆர்.கே. சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்று உள்ளார். அவர் கலிபோர்னியாவில் அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றியபோது, இந்திய பிரதமர் மோடிஜிக்கு அருகில் கடவுள் உட்கார்ந்தால், பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என கடவுளுக்கே அவர் பாடம் எடுப்பார்.

வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் புரிந்து கொள்ளவும் இந்தியாவின் மோடி அரசு மறுக்கிறது. செங்கோல் மனோபாவம் கொண்டவர்களிடம் நாம் வேறு எதனையும் எப்படி எதிர்பார்க்க முடியும்? என பேசினார். அவரது இந்த பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் வெளியிட்டது.

இதேபோன்று, இதற்கு முன்பு இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு பின்னர், இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதும், மத்திய அரசை குறை கூறி பேசினார். இதற்கு பா.ஜ.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்நிய மண்ணில் சொந்த நாட்டை பற்றி குறை கூறுகிறார் என அப்போது கண்டனம் எழுந்தது.

இந்நிலையில், மத்திய மந்திரி ஆர்.கே. சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்தியாவில் காங்கிரஸ் தலைவர்களுக்கு என்று பார்வையாளர்கள் யாரும் இல்லை. அதனால் அவர்கள் வெளிநாடு போகிறார்கள். அவர்கள், 100 முதல் 200 பேரை அழைத்து அறை ஒன்றில் கூட செய்து, சொற்பொழிவாற்றுகிறார்கள்.

வெளிநாட்டுக்கு சென்று, தங்களது சொந்த நாட்டை விமர்சிக்கும் இவர்கள் என்ன மாதிரியான ஆட்கள்? என்று நான் நினைத்து பார்க்கிறேன். இதுபோன்ற விசயங்களை வேறு எந்த அரசியல் தலைவர்களும் செய்யமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.


Next Story