கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் 11 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை!


கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் 11 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை!
x
தினத்தந்தி 17 Jun 2023 6:45 PM GMT (Updated: 18 Jun 2023 5:23 AM GMT)

தட்சிண கன்னடாவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவியை கற்பழித்து கொலை செய்தவரை விடுதலை செய்து பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

பெங்களூரு:

தட்சிண கன்னடாவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவியை கற்பழித்து கொலை செய்தவரை விடுதலை செய்து பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

மாணவி கற்பழித்து கொலை

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியை சேர்ந்த கல்லூரி மாணவி கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந் தேதி மாயமாகி இருந்தார். மறுநாள் (13-ந் தேதி) அந்த மாணவி பெல்தங்கடி அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் மாணவியை கற்பழித்துகொலை செய்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பெல்தங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் கல்லூரி மாணவியை கற்பழித்து கொலை செய்ததாக சந்தோஷ் ராவ் என்பவர் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்த கொலை சம்பவம் கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டு இருந்தது. அதன்படி, சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி விட்டு, பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்கள்.

விடுதலை

அதன்படி, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சந்தோஷ் பி.வி. முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது கல்லூரி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான சந்தோஷ் ராவ் நிரபராதி என்று கூறி, அவரை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

அதாவது கொலை நடந்த பகுதியில் சந்தோஷ் ராவ் இல்லாமல் இருந்ததுடன், அவருக்கு எதிரான சாட்சி மற்றும் ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் விடுதலை செய்வதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.


Next Story