கடன் பிரச்சினை; டெல்லியில் போலீஸ் உயர் அதிகாரியின் மகன் கால்வாயில் தள்ளிவிட்டு கொலை


கடன் பிரச்சினை;  டெல்லியில் போலீஸ் உயர் அதிகாரியின் மகன் கால்வாயில் தள்ளிவிட்டு கொலை
x
தினத்தந்தி 27 Jan 2024 2:39 AM GMT (Updated: 27 Jan 2024 2:41 AM GMT)

பணத்தை திருப்பி தராத ஆத்திரத்தில் லக்ஷ்யா சவுகானை கால்வாயில் தள்ளிவிட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியைச் சேர்ந்த ஏ.சி.பி. யஷ்பால் சிங்கின் மகன் லக்ஷ்யா சவுகான் (24). இவர் டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி கோர்ட்டில் வக்கிலாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த திங்கள்கிழமை, திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதாக கூறிவிட்டு பரத்வாஜ் மற்றும் அபிஷேக் ஆகிய 2 நபர்களுடன் சென்றுள்ளார்.

ஆனால் அடுத்த நாள் லக்ஷ்யா சவுகான் வீடு திரும்பாத நிலையில், தனது மகனை காணவில்லை என யஷ்பால் சிங் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், கால்வாய் ஒன்றில் லக்ஷ்யா சவுகானின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் லக்ஷ்யா சவுகானுடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற அபிஷேக்கை கைது செய்து விசாரணை நடத்தினர். முன்னதாக பரத்வாஜிடம் லக்ஷ்யா சவுகான் கடன் வாங்கியதாகவும், பணத்தை திருப்பி கேட்டபோது லக்ஷ்யா சவுகான் கொடுக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பரத்வாஜ், திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது அபிஷேக்கின் உதவியோடு லக்ஷ்யா சவுகானை கால்வாயில் தள்ளிவிட்டு கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அபிஷேக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாகியுள்ள பரத்வாஜை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story