பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி: டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு


பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி: டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம்

பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் ஆன்லைன் பட்டாசு விற்பனை மற்றும் வினியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 1-ந்தேதி வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும் என டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தனியார் விற்பனை நிறுவனத்தின் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரத்து செய்ய கோரிக்கை

அதில், 'கொரோனா சூழலை கருத்தில் கொண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் பட்டாசு வெடிக்க கடந்த 2000-ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக தடை விதித்தது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் பட்டாசுக்கு தடை விதிப்பதில், அதுவும் தலைநகரில் காற்றின் தரக்குறியீடு நல்ல நிலையில் இருக்கும்போது எவ்வித அடிப்படையும் இல்லை.

எனவே டெல்லி அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது

இந்த ரிட் மனுவை நீதிபதி யஷ்வந்த் வர்மா விசாரித்தார். அப்போது நீதிபதி, 'இதுதொடர்புடைய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளனவா?, இந்த மனுவின் நோக்கம் என்ன?' என்பது குறித்து விளக்கம் அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை தள்ளி வைத்திருந்தார்.

தள்ளுபடி செய்து உத்தரவு

இதற்கிடையே இதே விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு அர்ஜுன் கோபால் என்பவா் தாக்கல் செய்த பிரதான வழக்குடன் இணைத்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த 10-ந்தேதி உத்தரவிட்டது.

இதை பதிவு செய்து கொண்ட டெல்லி ஐகோர்ட்டு, 'டெல்லியில் பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் ஒட்டுமொத்த தடை விதித்த மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை செய்யக்கோரும் ரிட் மனுவை விசாரிப்பது பொருத்தமாக இருக்காது' என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அவசரமாக விசாரிக்க மறுப்பு

இதற்கிடையே பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று அவரது தரப்பு வக்கீல் ஷாஷங் சேகர்ஜா வலியுறுத்தினார்.

இந்த முறையீட்டை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு, 'இந்த விவகாரம் தொடர்பான மனுக்கள் பின்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும், மக்கள் தூய்மையான காற்றை சுவாசிக்கட்டும். தீபாவளியை கொண்டாட பல்வேறு வழிகள் உள்ளன. பணத்தை இனிப்புகளுக்காக செலவிடு்ங்கள்' என தெரிவித்தது.


Next Story