டெல்லி போராட்டம்; அனைவருக்கும் சட்டம் சமம், எல்லா வீரர்களும் எங்களுக்கு முக்கியம்: அனுராக் தாக்குர்


டெல்லி போராட்டம்; அனைவருக்கும் சட்டம் சமம், எல்லா வீரர்களும் எங்களுக்கு முக்கியம்: அனுராக் தாக்குர்
x

டெல்லி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்ட விவகாரத்தில், அனைவருக்கும் சட்டம் சமம் மற்றும் எல்லா வீரர்களும் எங்களுக்கு முக்கியம் என அனுராக் தாக்குர் கூறியுள்ளார்.

மும்பை,

மராட்டியத்தின் மும்பை நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர் கலந்து கொண்டார். அப்போது மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசினார்.

அவர் பேசும்போது, டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீரர்களின் போராட்ட விவகாரம் பற்றி நாங்கள் உணர்வுப்பூர்வ முறையில் கையாண்டு வருகிறோம்.

வீரர்கள் என்னென்ன விசயங்களை வலியுறுத்துகிறார்களோ அவற்றை எல்லாம் நாங்கள் செய்து வருகிறோம். டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த உடன், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனை அரசியலாக்கும் அனைவருக்கும், நான் கூறி கொள்ள விரும்புவது என்னவென்றால், சட்டம் அனைவருக்கும் சமம். அனைத்து வீரர்களும் எங்களுக்கு முக்கியம் என்று கூறியுள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான, பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தெரிவித்து, ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், சரண் சிங்குடன், பயிற்சியாளர்கள் சிலர் மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உதவி செயலாளர் வினோத் தோமர் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.


Next Story