டெல்லி: இளம்பெண்ணை காரில் இழுத்து சென்ற விவகாரம்; குடிபோதையில் அஞ்சலி, உறுதிப்படுத்திய தோழி


டெல்லி:  இளம்பெண்ணை காரில் இழுத்து சென்ற விவகாரம்; குடிபோதையில் அஞ்சலி, உறுதிப்படுத்திய தோழி
x

டெல்லியில் இளம்பெண்ணை காரில் இழுத்து சென்ற விவகாரத்தில் குடிபோதையில் இருந்த அஞ்சலி வாகனம் ஓட்ட வேண்டும் என கூறினார் என்று அவரது தோழி கூறியுள்ளார்.



புதுடெல்லி,


டெல்லியில் கஞ்சவாலா நகரில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஸ்கூட்டியில் சென்ற அஞ்சலி சிங் (வயது 20) என்ற இளம்பெண் மீது நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.

அவரது உடல் காரில் சிக்கியபடி பல கி.மீ. தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்து உள்ளது. இதன்பின் வேறொரு இடத்தில் நிர்வாண கோலத்தில் அவரது உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவின்பேரில் இளம்பெண் மரணம் பற்றிய விரிவான அறிக்கையை அளிக்கும்படி டெல்லி காவல் துறை ஆணையரிடம் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. இதன்படி, டெல்லி போலீசில் சிறப்பு காவல் ஆணையாளராக உள்ள ஷாலினி சிங்கை விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது.

அஞ்சலிக்கு நடந்த பிரேத பரிசோதனை முடிந்துள்ளது. டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், அஞ்சலி குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளார். இந்நிலையில், அஞ்சலியுடன் சம்பவத்தன்று, மற்றொரு பெண்ணும் பயணம் செய்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

இதன்படி, அஞ்சலி வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்தும், நிதி என்ற அவரது தோழி ஸ்கூட்டியை ஓட்டியும் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் ஓட்டல் ஒன்றில் இருந்து வெளிவரும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளிவந்துள்ளன.

அதில், உயிரிழந்த இளம்பெண் அஞ்சலி மற்றும் அவரது தோழி நிதி இருவரும் அதிகாலை 1.30 மணியளவில் ஓட்டலை விட்டு வெளியே வருகின்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

ஒன்றரை மணிநேரம் அவர்கள் பயணம் கடந்துபோன நிலையில், அதிகாலை 3 மணியளவில் விபத்து நடந்துள்ளது. அவர்கள் வீட்டுக்கு செல்ல இவ்வளவு நேரம் எடுத்து கொண்டனரா? அல்லது வேறு எங்கும் சென்றனரா? என்ற கேள்வியும் வழக்கின் முன் விடை கிடைக்காமல் உள்ளது.

இந்த சூழலில், தோழிகள் இருவரும் குடிபோதையில் ஒருவருக்கு ஒருவர் தகராறில் ஈடுபட்டு உள்ளனர் என கூறப்படுகிறது.

இதனை அவர்கள் வெளியேறிய ஓட்டலின் உரிமையாளர் கூறிய தகவல் தெரிவிக்கின்றது. அவர்கள் இருவரும் குடிபோதையில் மோதி கொண்டனர். இதனால், சண்டை போட கூடாது என கூறினேன். அதன்பின் அவர்கள் இருவரும் நடந்து செல்லும்போதும் தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனையடுத்து, அவர்களை ஓட்டலை விட்டு வெளியேற்றினேன் என அவர் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவத்தில் அஞ்சலியின் தோழி நிதி சாட்சியாக உள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, அவர் (உயிரிழந்த பெண்) குடிபோதையில் இருந்த நிலையில், வாகனம் ஓட்ட வேண்டும் என என்னிடம் வற்புறுத்தினார்.

எங்களை கார் மோதியதும், ஒரு புறம் நான் விழுந்து கிடந்தேன். காரின் அடியில் தோழி சிக்கி கொண்டார். காரின் கீழ் அஞ்சலி சிக்கி கொண்டார் என்பது காரில் இருந்தவர்களுக்கு தெரியும். நான் பயந்துவிட்டேன். போலீசாரிடம் எதுவும் கூறாமல் வீட்டுக்கு சென்று விட்டேன். யாரிடமும் எதுவும் கூறவில்லை என கூறியுள்ளார்.


Next Story